Monday, November 13, 2017

யார் குற்றவாளி?


By ஆசிரியர்  |   Published on : 11th November 2017 03:49 AM  |   
கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி குருகிராம் ரயான் உறைவிடப் பள்ளியில் ஏழு வயது பிரத்யுமன் தாக்கூர் என்கிற சிறுவன் கழிப்பறையில் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது பாலியல் இச்சைக்கு உடன்படாத ஏழு வயது சிறுவனைப் பள்ளி வாகனத்தின் நடத்துநர் அசோக் குமார் படுகொலை செய்தார் என்று அன்று இரவே ஹரியாணா காவல்துறையினர் அறிவித்தனர்.
 இப்போது பிரத்யுமன் தாக்கூரின் படுகொலைக்குக் காரணம் அசோக் குமார் அல்ல என்றும், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவன் என்றும் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையில் கண்டறிந்திருக்கிறது. பள்ளியில் நடக்க இருந்த தேர்வுகளையும், பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தையும் தள்ளிப்போட அந்த 11-ஆம் வகுப்பு மாணவன், ஏழு வயது பிரத்யுமன் தாக்கூரை கொலை செய்திருப்பது மத்திய புலனாய்வுத் துறையினரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 மத்திய புலனாய்வுத் துறை, கண்காணிப்பு கேமராப் பதிவுகளை நுணுக்கமாக ஆய்வு செய்ததுடன் நின்றுவிடாமல், 125 ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் என்று பரவலாக விசாரணை செய்து பிரத்யுமன் தாக்கூரை படுகொலை செய்தது 11-ஆம் வகுப்பு மாணவன்தான் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது.
 அந்த மாணவன் உள்ளூரில் உள்ள கடையிலிருந்து கத்தியை வாங்கியது மட்டுமல்லாமல், அதை யாரும் அறியாமல் பள்ளிக்கு எடுத்து வந்திருக்கிறார். அந்த மாணவனின் தந்தை, பொதுவான நபர், பள்ளியின் பொதுநல அலுவலர் ஆகியோர் முன்னிலையில், பிரத்யுமன் தாக்கூரின் கழுத்தை அந்தச் சிறுவன் சற்றும் எதிர்பார்க்காமல் அறுத்துப் படுகொலை செய்ததுடன் அந்தக் கத்தியை கழிப்பறையிலேயே மறைத்து வைத்ததாக இப்போது அந்த மாணவன் வாக்கு மூலம் அளித்திருக்கிறான்.
 இதில், பல கேள்விகள் எழுகின்றன. நடத்துநர் அசோக் குமாரைக் கைது செய்தபோது அவர் கழிப்பறையிலிருந்து வெளியேறியது கண்காணிப்பு கேமராவில் கண்டறியப்பட்டதாக ஹரியாணா காவல்துறை கூறியிருந்தது. மேலும், வாகன நடத்துநர் பள்ளி வாகனத்திலிருந்த கத்தியைக் கழிப்பறையில் கழுவிக்கொண்டிருந்தபோது, ஏழு வயது பிரத்யுமன் தாக்கூர் உள்ளே நுழைந்ததாகவும், அந்தச் சிறுவன் தனது பாலியல் வெறிக்கு உட்படாததால் அவனை அசோக் குமார் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் காவல்துறை கூறியதெல்லாம் பொய்யான தகவலா? கழிப்பறையில் கத்தி கண்டெடுக்கப்பட்டது குறித்து குருகிராம் காவல்துறையினர் ஏன் தெரிவிக்காமல் இருந்தனர்.
 ரயான் உறைவிடப் பள்ளி கொலை வழக்கில் அவசர அவசரமாக விசாரணையை முடித்துக் குற்றவாளி நடத்துநர் அசோக் குமார்தான் என்று கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அறிவித்த குருகிராம் காவல்துறையினரின் செயல்பாடு விசித்திரமாக இருக்கிறது. நடத்துநர் அசோக் குமார் துன்புறுத்தப்பட்டு வாக்குமூலம் தரக் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும். எந்த ஒரு மனிதரும் தன்னிச்சையாக தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை.
 இந்தப் பிரச்னையில் ஊடகங்களின் பங்கு குறித்தும் கூறாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, 24 மணிநேரத் தொலைக்காட்சி சேனல்கள் வந்த பிறகு, ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக்கூடப் பெரிதுபடுத்துவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டிப் போட்டாக வேண்டிய கட்டாயத்தால் அச்சு ஊடகங்களும் தீர விசாரித்து உண்மையைப் பதிவு செய்வதற்கு காத்திருக்காமல், பரப்பரப்பு செய்தி ஆக்குகின்றன. போதாக்குறைக்கு சமூக வலைதளங்களான சுட்டுரையும், கட்செவி அஞ்சலும், முகநூலும் ஆதாரமில்லாத தகவல்களைக்கூடப் புயல் வேகத்தில் பொதுவெளியில் பரப்புகின்றன. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் ஆத்திரமும் உருவாக்கப்படுகிறது.
 ஆட்சியாளர்களும் சரி, காவல்துறையினரும் சரி, ரயான் உறைவிடப் பள்ளி படுகொலை உள்ளிட்ட எல்லாப் பிரச்னைகளிலும் உண்மையைக் கண்டறிவதைவிட, ஊர் வாய்க்குப் பூட்டு போடுவதில் அக்கறை செலுத்துகின்றன. பரபரப்பாக்கப்பட்டுவிட்ட வழக்குக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதத்தில் விரைந்து விசாரணையை முடித்துக் குற்றவாளியை அடையாளம் காட்டி, வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று, தங்களது கடமையை முடித்துக்கொள்வதில் குறியாக இருக்கிறது அரசியல் தலைமையின் அழுத்தத்துக்கு ஆளாகும் காவல்துறை.
 நிரபராதியான அசோக் குமார் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரிக்காமல் போயிருந்தால், ஒருவேளை தூக்குக் கயிற்றை முத்தமிட்டிருக்கலாம். இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ 4.20 லட்சம் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் நடத்துநர் அசோக் குமார் போல, காவல்துறையின் வற்புறுத்தலால் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிரபராதிகளாகக்கூட இருக்கலாம்.
 100 குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் சட்டத்தின் நோக்கம். ஆனால், இங்கே 100 நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் ஒருசிலர் மட்டுமே பிடிபடுவதும் வாடிக்கையாக இருக்கிறதோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
 இதிர் யார் குற்றவாளி? பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகங்களா? ஊர்வாயை மூடுவதற்காக நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கும் காவல்துறையினரா?

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...