இனி அடிக்கடி பேருந்துக் கட்டணம் உயரும்: தமிழக அரசு சூசகம்
Published : 19 Jan 2018 22:06 IST ]
சென்னை
இனி பேருந்துக் கட்டணம் அடிக்கடி உயர வாய்ப்புள்ளது என தமிழக அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசியலில் பேருந்துக் கட்டண உயர்வு கொள்கை முடிவாக இதுவரை இருந்துவந்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வு என்பது மிகுந்த போராட்டத்திற்கிடையே நடக்கும். சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினை என்பதால் பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் யோசித்து முடிவெடுத்து வந்தனர்.
ஜெயலலிதா தான் முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆறு மாதத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. இதன் விளைவு அதிமுக தேமுதிக கூட்டணி முறிந்தது.
அதன் பின்னர் ஜெயலலிதா இரண்டாவது முறை ஆட்சிக்கு வரும் வரை பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. ஜெயலலிதா இரண்டு முறை கட்டண உயர்வு ஏற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் உயர்த்தவில்லை. காரணம் அது அரசின் கொள்கை முடிவாக இருந்தது.
ஆனால் தற்போது தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதோடல்லாமல் கூடுதலாக சில விஷயங்களை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இனி பேருந்துக்கட்டணம் என்பது கொள்கை முடிவுகளை தாண்டி அடிக்கடி உயரும் என சூசகமாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் கிரீஸ் எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை உள்ளடக்கிய அளவீட்டு குறியீட்டின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.
மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்துக் கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கட்டண உயர்வு இனி அடிக்கடி கால இடைவெளியில் இருக்கும், இதே போல் தனியார் பேருந்து கட்டணமும் இதையொட்டி உயர வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment