Tuesday, October 2, 2018

மாவட்ட செய்திகள்

தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம்




சேலத்தில் தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 01, 2018 03:00 AM

சேலம்,

சேலம் ஜங்சனில் இருந்து நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி வழியாக பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்ச உணர்வில் சென்றனர்.

பஸ் அஸ்தம்பட்டியை கடந்து வின்சென்ட் பகுதியில் சென்றது. அப்போது வேகமாக சென்ற தனியார் பஸ்சால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், பஸ்சை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். பின்னர் அவர்கள் பஸ்சை மறித்தபடி சாலையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தினர். பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து தகவலறிந்ததும் அஸ்தம்பட்டி ரோந்து போலீசார் அங்கு வந்தனர். பஸ்சை சிறைபிடித்த வாகன ஓட்டிகளை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், பஸ்சை வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசாரிடம் கூறினர். ஆனால் தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளை கலைந்து செல்ல சொன்னதால், போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், தனியார் பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து வாகன ஓட்டிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சேலம் மாநகரில் தனியார் பஸ்கள் அதிக வேகத்திலும், அதிக ஒலி எழுப்பியபடியும் செல்கின்றன. இதனை போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன, என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024