Tuesday, October 2, 2018

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பீர், மது விற்பனை அமோகம்

Added : அக் 02, 2018 04:18

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, சென்னை மற்றும் புறநகரில், ஒரே நாளில், 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பீர் மற்றும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இது, வழக்கத்தை விட, 10 கோடி ரூபாய் அதிகம்.தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், 840 மதுக் கடைகள் உள்ளன.சென்னை, நந்தனத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவை, நேற்று முன்தினம், அரசு நடத்தியது. அதில் பங்கேற்க, பல மாவட்டங்களில் இருந்தும், அ.தி.மு.க.,வினர், சென்னையில் குவிந்தனர்.அவர்களில் ஏராளமானோர், மது வகைகளை வாங்க, சென்னை மற்றும் புறநகரில் உள்ள, மதுக் கடைகளில் குவிந்தனர். இதனால், ஒரே நாளில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.இது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, மதுக்கடைகளில், தினமும் சராசரியாக, 2 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, மது வகைகள் விற்பனையாகும்.விடுமுறை நாட்களில், மது விற்பனை, 1 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும். மாத இறுதி என்பதால், சனிக்கிழமை விற்பனை மந்தமாக இருந்தது.எம்.ஜி.ஆர்., விழாவிற்கு வந்த, அ.தி.மு.க.,வினர், சென்னை மட்டுமின்றி, அதை சுற்றிய பல இடங்களுக்கும் சென்றனர். இதனால், சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 500 கடைகளில், மது விற்பனை அமோகமாக இருந்தது. ஒரு கடையின் விற்பனை சராசரியாக, 5 லட்சம் ரூபாயாகும்.இதை, 500 கடைகளுக்கும் கணக்கிட்டால், மொத்த விற்பனை, 25 கோடி ரூபாய். இது, வழக்கத்தை விட, 10 கோடி ரூபாய் அதிகம். மொத்தம், 46 ஆயிரம் பெட்டி மது வகைகளும்; 34 ஆயிரம் பெட்டி பீர்களும் விற்பனையாகின. எஞ்சிய, 340 கடைகளையும் சேர்த்தால், மொத்த மது விற்பனை, 30 கோடி ரூபாயை தாண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024