Thursday, October 18, 2018

ஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு! எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின் உயிர்

இரா.மோகன்

உ.பாண்டி


ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நடந்த அரசுப் பேருந்து - கார் விபத்து சம்பவத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்தும் சிவகாசியிலிருந்து ராமநாதபுரம் வந்த காரும் சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் காவல் நிலையம் அருகே இன்று காலை நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பாரதி நகரைச் சேர்ந்த அருண் (20), உமய பாலா (18), விஜயராஜ் (18 ) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்தில் கீழக்கரை மாயாகுளம் நவீன், உமயகணேஷ் , புவனேஸ்வரன் , கிருஷ்ணகுமார் , கமல்ராஜ் , வேல் முனியாண்டி, மோகன் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.




காயமடைந்தவர்கள் விரைவாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். படுகாயமடைந்த கிருஷ்ணன் உட்பட 5 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்த 3 பேர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து பட்டாசுகள் வாங்கித் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து கீழச் செல்வனூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வாங்கிவிட்டு திரும்பியபோது இளைஞர்கள் மூன்று பேர் இந்தக் கோர விபத்தில் பலியான சம்பவம் மாயாகுளம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024