Tuesday, October 9, 2018

ஜெ.,க்கு அமைச்சர் தர்ப்பணம்

Added : அக் 08, 2018 22:56




மயிலாடுதுறை: மகாளய அமாவாசையான நேற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தமிழக கைத்தறி துறை அமைச்சர் மணியன், தர்ப்பணம் கொடுத்தார்.

 நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், காவிரி அந்திம புஷ்கர விழா நேற்று துவங்கியது.இதில் பங்கேற்ற, தமிழக கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் மணியன், மகாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரியில் நீராடி, முன்னோர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:நாட்டின் நலன் கருதியும், மக்களின் தேவைகள் கருதியும், முதல்வர், டில்லியில், பிரதமரை சந்தித்துள்ளார் என்பது தான் யதார்த்தமான உண்மை. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல; தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எந்த திட்டத்தை வேண்டாம் என புறக்கணிக்கின்றனரோ, அதை, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.மத்திய அரசு, அவர்களது நடவடிக்கைகளை தெரிவிக்கின்றனர். மாநில அரசின் அனுமதிக்காக வரும் போது தான் தலையிட முடியும். தினகரன் அரசியல்வாதியாக இருப்பதற்கு தகுதியற்றவர். தனிமையில் ஒருவரோடு சந்திப்பு நடக்கும்போது, அந்த சந்திப்பு குறித்த ரகசியம் காக்க வேண்டும். அதுதான் மனித தன்மை.அந்த வகையில், மனித தன்மையற்றவர்களில் சேர்க்கப்பட வேண்டியவர் தினகரன். தனிமையில் சந்தித்து பேசிய செய்திகளை வெளியில் சொல்லும் அவர், மக்களிடம் நம்பகத் தன்மையை இழந்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024