Saturday, November 4, 2017


தொலைதூர கல்வி திட்டத்தில் தொழில்நுட்ப கல்விக்கு தடை


புதுடில்லி: 'தொழில்நுட்ப கல்வியை, தொலைதுார கல்வி திட்டத்தில் வழங்கக் கூடாது' என, பல்கலைக்கழகங்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நாட்டில் செயல்படும், மத்திய, மாநில பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைகள், நேரடியாகவும், கல்லுாரிகள் வாயிலாகவும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்கி வருகின்றன. அவற்றில் சில பல்கலைகள், தொலைதுார கல்வி திட்டத்தில், மாணவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பளிக்கின்றன.சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதுார கல்வி திட்டத்தில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:தொலைதுார கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள், தொலைதுார கல்வி திட்டத்தில், பி.இ., - பி.டெக்., பட்டங்களை வழங்கியுள்ளன. இவ்வகை பட்டங்கள் செல்லாது

வரும், 2018 - 19 முதல், இவ்வகை கல்வி திட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. 2001 முதல், தொலைதுார கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட, அனைத்து தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் சார்பில் நடத்தப்படும், ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். இரண்டு வாய்ப்புகளுக்குள், இதில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

news today 23.10.1024