Monday, November 6, 2017


மயிலாடுதுறையில் மழை நீடிப்பு : இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், ஏழாவது நாளாக கனமழை பெய்து வருவதால், மீனவர்கள், விவசாயிகள் என, அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் பகுதியில், ஏழாவது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. 

பாய், போர்வை : வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் உள்ள மக்களை மீட்டு, 13 முகாம்களில் தங்க வைத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உணவு, வேட்டி, சேலை, பாய், போர்வை வழங்கப்பட்டது.
தலைச்சங்காடு, கருவேலி, எருமல் உள்ளிட்ட பல இடங்களில், வரத்து வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், 1 லட்சம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில், 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகும் நிலையில் உள்ளன. தண்ணீரை வெளியேற்ற உதவுமாறு, பொதுப்பணி துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
வருவாய் துறை அதிகாரிகள், சமாதானப்படுத்தினர். மறியலால், சீர்காழி-- திருமுல்லைவாசல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பவுன்ராஜ், பூம்புகாரில் நேற்று, மழை பாதிப்பை பார்வையிட வந்தார். அவரை மீனவர்கள் சூழ்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுமாறு பொதுப்பணி துறையினரை, எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
கனமழை மற்றும் கடல் சீற்றத்தால், சந்திரபாடி துவங்கி கொடியம்பாளையம் வரை, 26 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 1,000 விசைப்படகுகள், 5,000த்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், துறைமுகம் மற்றும் துாண்டில் வளைவுகளில், பாதுகாப்பாக நிறுத்தப் பட்டுள்ளன.
பழநியில் கொட்டியது
பழநியில் கொட்டிய மழையால், நேற்று இரவு, தங்க ரத புறப்பாடு நிறுத்தப்பட்டது; 'ரோப் கார்' சேவையும் பாதிக்கப்பட்டது.
பழநியில், நேற்று மாலை 4:45 மணி முதல், மழை பெய்தது. இதனால், ஒரு மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே, குளம்போல தேங்கிய தண்ணீரால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மிதந்து சென்றன.
மழையால், 'ரோப் கார்' சேவை நிறுத்தப்பட்டு, 'வின்ச்' படிப்பாதையில் பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 
இரவு 7:00 மணிக்கும் மழை தொடர்ந்ததால், தங்கரதம் நிறுத்தப்பட்டு, தேர்நிலையில் பூஜைசெய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தங்கரதம் இழுக்க கட்டணம் செலுத்திய, 160 பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பழநியில், 66.5 அடி உயரம் உள்ள வரதமாநதி அணை, 65 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு, 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
'இன்று காலையில் அணை இரண்டாவது முறையாக நிரம்பும்' என, பொதுபணித்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...