Friday, November 10, 2017


அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை சிகிச்சை : ஓய்வூதியருக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு


மதுரை: 'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் ஓய்வூதியர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, செலவு தொகையை நிராகரித்ததை ஏற்க முடியாது. தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை செல்லுாரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோதண்டராமன், மருத்துவமனையில் 2015ல் இடுப்பில் அறுவைச் சிகிச்சை நடந்தது. ஒரு லட்சத்து 7,690 ரூபாய் செலவானது. ஓய்வூதியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை கட்டணத்தை வழங்கக் கோரி தமிழக அரசிடம், அவரது மனைவி சாரதா விண்ணப்பித்தார்.
'காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை' என ஓய்வூதிய இயக்குனர், மதுரை கலெக்டர், மாவட்ட கருவூல அதிகாரி நிராகரித்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் சாரதா மனு செய்தார்.
தனி நீதிபதி, 'சிகிச்சை கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓய்வூதிய இயக்குனர், கலெக்டர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு உத்தரவு:
குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளில், மருத்துவ வசதி பெறும் உரிமை அடங்கியுள்ளது. அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற்றதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால், தொகையை வழங்க வேண்டியது அரசின் கடமை. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி நிராகரித்ததை ஏற்க 
முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி 
செய்கிறோம். 9 சதவீத வட்டி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
இவ்வாறு 
உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.05.2026