Saturday, April 18, 2015

இனி அறிவிக்க என்ன இலவசங்கள் இருக்கின்றன?

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட இலவசங்கள், மக்களின் மனோபாவத்தையே உழைப்பில் இருந்து இலவசங்கள், மானியங்களை தேடும் நிலைக்கு மாற்றிவிட்டது. தேர்தல் வரும்போது நாங்கள் கடந்த தேர்தலின்போது அறிவித்த இந்த இலவசங்களையெல்லாம் வழங்கிவிட்டோம், இந்த மானியங்களையெல்லாம் வழங்கிவிட்டோம், எங்களை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்யுங்கள், உங்களுக்கு இன்னும் தருகிறோம் என்று கூறுகிறார்கள். எதிர்த்து போட்டியிடும் கட்சியோ, ஆகா! பார்–பார் உன்னைவிட நான் சொல்கிறேன், அதிக இலவசங்கள், மானியங்களை என்று ஒரு நீண்ட பட்டியலையே தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்து போட்டியிடுகிறார்கள். இறுதியில் ஒரு கட்சி இந்த போட்டியில் வெற்றியும் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிவிடுகிறது. இப்படியே சேர்த்து சேர்த்து முந்தைய அரசாங்கம் தந்த இலவசங்களையும் கொடுத்து, இவர்கள் பங்குக்கு தந்த இலவசங்கள், மானியங்களையும் சேர்த்து அரசு வருவாயில் கணிசமான அளவுக்கு பெரும் தொகையை விழுங்கிவிடுகிறது. வரி இல்லா பட்ஜெட் போடவேண்டும் என்ற நோக்கில், வருவாய் பெருகாத நிலையில் கைவசம் இருக்கும் நிதியில் பெரும்பகுதி இப்படி இலவசங்களுக்கே போய்விடுவதால், வளர்ச்சித்திட்டங்களுக்கு சொந்த வருவாய் இல்லாமல் கடன் வாங்கி, அந்த கடனும் வட்டிக்குமேல் வட்டியாக சேர்ந்துபோய்விடுகிறது.

தமிழ்நாட்டில் இப்போது கருவில் தொடங்கி, கல்லறைக்கு போகும் வரையில் எல்லாமே இலவசமயமாகிவிட்டது. இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அரசின் வருவாய் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 681 கோடியே 33 லட்ச ரூபாயாகும். இந்த தொகையை வைத்துத்தான் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றவேண்டும். பட்ஜெட் மதிப்பீட்டில் 59 ஆயிரத்து 185 கோடி ரூபாய் உதவித்தொகைகள், மானியங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு 41 ஆயிரத்து 215 கோடியே 57 லட்ச ரூபாயும், ஓய்வூதியத்துக்கு 18 ஆயிரத்து 667 கோடியே 86 லட்சமும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அரசுக்கு இருக்கும் 2 லட்சத்து 11 கோடியே 483 ரூபாய் கடனுக்கு இந்த ஆண்டு 17 ஆயிரத்து 856 கோடியே 65 லட்ச ரூபாய் வட்டியாக மட்டும் கட்டவேண்டியது இருக்கும் என கருதப்படுகிறது. ஆக, பெரும்பகுதியான அரசின் வருவாய் இந்த இனங்களுக்கே சென்றுவிட்டால், வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதிக்கு எங்கே போவது? ஒன்று கடன் வாங்கவேண்டும், அல்லது வளர்ச்சித்திட்டங்களைச் சுருக்கவேண்டும். வளர்ச்சித்திட்டங்கள் இல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றத்தை காணமுடியாது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. பசியாக இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுத்தால் அந்த ஒருவேளை பசியாறுவான். ஆனால், அவனுக்கு மீனை பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், அவனே தன் வாழ்நாள் முழுவதும் மீனைப் பிடித்து தானே தன் பசியைப் போக்கிக்கொள்வான். இந்த பழமொழியை அரசியல் கட்சிகளும் பின்பற்றி ஆட்சிக்கட்டிலில் அமரும்போது தேவையான இலவசங்கள், மானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும், உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார திட்டங்களிலும் அக்கறைகாட்டினால், மாநிலம் வளர்ச்சி பெறமுடியும். இலவசங்கள் இல்லாத குஜராத் முன்னேற்றத்தைக்காணும்போது, தமிழ்நாட்டால் ஏன் முடியாது? இவ்வளவு இலவசங்களை வழங்கிவிட்ட நிலையில், இனிவரும் தேர்தலில் அறிவிப்பதற்கு என்ன இலவசம் பாக்கி இருக்கிறது? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும். இலவசங்கள், மானியங்களை தேடாமல் உழைக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் வளர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...