Tuesday, August 15, 2017


கிட்னி, கண் மாற்று அறுவை சிகிச்சை : சேலம் அரசு மருத்துவமனையில் இழுபறி
பதிவு செய்த நாள்15ஆக
2017
01:35

சேலம்: சேலம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிறுநீரக சிகிச்சை பிரிவில், போதுமான ஆப்பரேஷன் தியேட்டர், டாக்டர்கள் இருந்தும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.அதே நேரம், தானமாக பெறப்படும் கிட்னி, தேவைப்படும் நபருக்கு பொருந்துமா என்பதை கண்டறியும், 'லேப்' வசதி இல்லை.

குற்றச்சாட்டு : அத்துடன், கிட்னியில் உள்ள ரத்தக்குழாய் அமைப்பை கண்டறியும், சி.டி., ரீனல் ஆஞ்சியோகிராம் வசதி இல்லையென கூறி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல், தட்டிக் கழிப்பதாக, நேர்மையான டாக்டர்கள் கூறுகின்றனர். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய, 2015ல் அரசு உத்தரவிட்டு, இரண்டாண்டுகள் ஆகியும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒரே நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டு, கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை துவங்கிய நிலையில், சேலம் மருத்துவ கல்லுாரி டீன், நடவடிக்கை எடுக்க வில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'கிட்னியை, 'மேட்சிங்' பார்க்கும் லேப், இல்லையென்றாலும், கோவை, சென்னைக்கு அனுப்பி பார்த்து கொள்ளலாம். ஆஞ்சியோகிராம் வசதி செய்து கொடுத்தால், அறுவை சிகிச்சையை துவங்கி விடலாம்' என, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக, 2010 ஆக., 20ல் தரம் உயர்த்தப்பட்டு, ஏழாண்டுகள் ஆகியும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தால், பெயரளவில், மருத்துவமனை செயல்படுவதாக, நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நடவடிக்கை : அதேபோல, கண் அறுவை சிகிச்சை துறையில், கண்புரை நீக்குதல், கண்ணில் நீர் வடிதல், நீர் அழுத்தம் குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மட்டுமே, ஆப்பரேஷன் செய்யப்படுகிறது. 'கண் வங்கி வசதியில்லை' என கூறி, கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை.

டீன் கனகராஜ் கூறியதாவது:சிறுநீரக அறுவை சிகிச்சை துறை தலைவராக இருந்த செல்வராஜ், ஒத்துழைப்பு மற்றும் ஆர்வமின்மை காரணமாக, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, சிறுநீரக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையுடன் நான்கு முறை, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.அதிகபட்சம், இரண்டு மாதங்களில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை துவங்கப்படும். கிட்னி தானம் தொடர்பாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை. கண் வங்கி குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024