Wednesday, August 30, 2017

பிரதமர், தமிழிசையை குறித்து அவதூறு பேச்சு நாஞ்சில் சம்பத் மீது குவியும் வழக்குகள்
DINAKARAN

2017-08-30@ 00:17:04




* கைதுக்கு அஞ்சி தப்பி ஓட்டம்
* வாயை அடக்க வேண்டும் என பாஜ எச்சரிக்கை

சென்னை : பிரதமர், தமிழிசையை குறித்து அவதூறு பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்குகள் குவிகின்றன. இதனால், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில், அவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது,” புதைப்பதற்கு இடம் தேடி அலையும் பிணங்கள் கூட அவரை ஏற்றுக்கொள்ளாது. வாயாலேயே வடை சுடுகின்ற பெருமாட்டியால் ஒரு நாயுக்கும் பிரயோஜனம் இல்லை” என்றும் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழக பாஜ தலைவர் தமிழிசை குறித்து நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை நேற்று முன்தினம் இரவு பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் நாஞ்சில் சம்பத் வீட்டில் இல்லை.

இந்நிலையில் அவர் டி.டி.வி. தினகரனை சந்தித்து விட்டு பட்டினப்பாக்கம் அருகே உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் உணவு அருந்திக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதை சற்றும் எதிர்பார்க்காத நாஞ்சில் சம்பத் உடனே காரில் ஏறி தப்ப முயன்றார். இருந்தபோதும் அவர் பாஜவினரிடம் சிக்கி கொண்டார். அப்போது பாஜவினர் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாஞ்சில் சம்பவத்தை மீட்டனர். இதைத் தொடர்ந்து பாஜவினர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், அவதூறாக பேசியது, பொது தளங்களில் ஆபாசமாக பேசியது, பெண்களை இழிவுப்படுத்தி பேசியது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாஞ்சில் சம்பத்தை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து நாஞ்சில் சம்பத் தற்போது வீட்டில் தங்காமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அஇஅதிமுக (அம்மா) அணியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...