Tuesday, August 15, 2017


சினிமாக்காரர்களால் தமிழகம் நாசமாகிவிட்டது : கோவையில் பா.ம.க., அன்புமணி வேதனை

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:58




கோவை: ''சினிமாக்காரர்களின் ஆட்சியால், 50 ஆண்டுகளாக தமிழகம் நாசமாகி விட்டது. நவீன அரசியலை நோக்கி, நாம் செல்ல வேண்டும். இதற்கு, ஆரோக்கியமான அரசியல் சூழல் உருவாக வேண்டும்,'' என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பவானி ஆற்றின் உபரி நீராக, 20 முதல் 100 டி.எம்.சி., தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் இணைந்து, கடலில் வீணாக கலக்கிறது. அதில் 1.2 டி.எம்.சி., தண்ணீரை வாய்க்கால் வாயிலாக திருப்பினால் போதும்; 701
நீர் நிலைகளை நிரப்ப முடியும்; நிலத்தடி நீர் மட்டம் உயரும்.காரமடை காளிங்கராயன் திட்டம் குறுகியது; 'பம்ப்பிங்' செய்து தண்ணீர் எடுப்பது சாத்தியமில்லை; தொழில்நுட்ப பிரச்னை ஏற்படும்; அவிநாசி - அத்திக்கடவு திட்டமே சிறந்தது.காமராஜர் காலத்தில் திட்ட மதிப்பீடு, 10 கோடி ரூபாயாக இருந்தது; இப்போது, 3,500 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மதிப்பீடு அதிகரித்திருந்தாலும், உலக வங்கியிடம் கடன் வாங்கியாவது செய்ய வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றாவிட்டால், கொங்கு மண்டல இளைஞர்களை திரட்டி, போராட்டம் நடத்துவோம்.

கடந்தாண்டு மருத்துவ கல்லுாரிகளில் ஒதுக்கப்பட்ட 3,400 'சீட்'களில், 3,300 'சீட்' சமச்சீர் பாடத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தது. 'நீட்' தேர்வால் 95 முதல் 98 சதவீதம் சி.பி.எஸ்.இ., முறையில் படித்த மாணவர்களுக்கும், 2 முதல் 5 சதவீத இருக்கையே சமச்சீர் மாணவர்களுக்கும் கிடைக்கும். நடப்பாண்டு, 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் முறையிலும், 16 ஆயிரம் மாணவர்களே சி.பி.எஸ்.இ., முறையிலும் படித்திருக்கின்றனர்.

 குறைந்தபட்சமாக, அரசு மருத்துவ கல்லுாரி இருக்கையை நிரப்ப மட்டும் விலக்கு அளிக்க வேண்டும்.தமிழக அரசு திவாலாகி விட்டது; அ.தி.மு.க.,வில் உள்ள மூன்று அணிகளும் கொள்ளையர் கூடாரமாக உள்ளது. அவர்களால், தமிழர்களுக்குதான் பாதிப்பு. கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு கூறினேன்.விவாதிக்க அழைப்பு விடுத்தார், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். நேரம் ஒதுக்கி,இடம் ஏற்பாடு செய்து, அழைப்பு விடுத்தேன்; அமைச்சர் வரவில்லை. ஆரோக்கிய அரசியல் உருவாக வேண்டும்; அத்தகைய கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். பள்ளி கல்வித்
துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். 50 ஆண்டுகளாக திராவிட ஆட்சியில் என்ன செய்திருக்கிறார்கள் என அவர் சொல்லட்டும். என்னென்ன சீரழிவு நடந்திருக்கிறது; இனி என்ன செய்ய வேண்டுமென, நான் சொல்கிறேன். நவீன அரசியலை நோக்கி, நாம் செல்ல வேண்டும்.அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சினிமாக்காரர்களின் ஆட்சியால், 50 ஆண்டுகளாக தமிழகம் நாசாமாகி விட்டது; கடனால் நம் மாநிலம் தத்தளிக்கிறது. தமிழகத்துக்கு நல்ல நிர்வாகி; இளைஞர்கள்; படித்தவர்கள் தேவை.

இரு கட்சிகளுக்கும் நீர் மேலாண்மை தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது இலவச பொருட்கள் வழங்குவது; சாராயம் வழங்குவது; 'டிவி'யில் தொடர் பார்க்க வைப்பது என, மக்களை அடிமையாக வைத்திருக்கின்றனர்.இலவச பொருட்கள் வழங்குவதற்கு பதில், கல்வியில் முதலீடு செய்யுங்கள். ஒரு மாதம் பெய்யும் மழையை, 11 மாதங்கள் சேமித்து வைத்து, பயன்படுத்த பழக வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...