சென்னை பல்கலை தேர்வுகளில் முறைகேடு?
நவ 13, 2017 23:53
சென்னை: தொலைநிலை கல்வியில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், சில தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பியடித்தல் போன்ற முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த, துணைவேந்தர், துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில், கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மையங்களில், பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்களை பார்த்தால், அவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது.
தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்றது குறித்து, பல்கலையின் தேர்வுத் துறை விசாரித்ததில், சிலர் ஏஜன்டுகளாகசெயல்பட்டு, ஆள் மாறாட்டம் மற்றும் காப்பியடித்தல் முறைகேட்டில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து, விசாரணை முடிந்த பின், முழு விபரத்தை சிண்டிகேட் கூட்டத்தில் வைக்க, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது. அதேபோல், பல்கலையின் தேர்வுகள் மற்றும் தொலை நிலை கல்வி தேர்வுகளில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து, துறை ரீதியாகவும் விசாரணை துவங்கியுள்ளது. இதில், தொலைநிலை கல்வி மையத்தில் உள்ள சிலர் மீதும், பல்கலை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் போலீஸ் வழியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment