Tuesday, November 14, 2017


'மொபைல்' செயலிழக்க கல்லூரிகளில் 'ஜாமர்'

 நவ 13, 2017 21:52

மதுரை: 'கல்லுாரி வளாகத்திற்குள், மொபைல் போனை செயலிழக்கச் செய்ய, 'ஜாமர்' கருவியை பொருத்தலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, ஒரு மாணவர் தாக்கல் செய்த மனு: கரூர் கருடம்பாளையம், வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரியில், 2016ல், பி.இ., - மெக்கானிக்கல் சேர்ந்தேன். விடுதியில் மொபைல் போன் பயன்படுத்தியதாகக் கூறி, என் மீது, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
என் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழை, கல்லுாரி நிர்வாகம் வழங்கவில்லை. சான்றிதழ்களை வழங்க, அண்ணா பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர், மகேஸ்வரன் தாக்கல் செய்த பதில் மனு: மனுதாரர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். மொபைல் போனை, விடுதி வார்டன் கைப்பற்றினார். அதில், ஆபாச படங்கள் இருந்தன. கல்லுாரியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை, 'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பினார். மனுதாரர், கல்விச் சான்றிதழ்களை கோரவில்லை; நாங்கள் தர மறுக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பின், நீதிபதி ஆர்.மகாதேவன் கூறியதாவது: கல்லுாரிகளில், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதிப்பதால், பல்வேறு தவறுகள் நடக்கின்றன. கல்லுாரி வளாகத்திற்குள் மொபைல் போனை செயலிழக்க, ஜாமர் கருவியை பொருத்தலாம்.
இது போன்ற விவகாரங்களில், மாணவர்கள், கல்லுாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி, ஏதேனும் அரசாணைகள் உள்ளவனா என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நவ., 20ல், தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...