Monday, December 9, 2019

என்கவுன்ட்டா் தீா்வல்ல!| பாலியல் வழக்குகளில் நீதி கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 07th December 2019 03:03 AM 

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் விழிக்கும்போதும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில், ஏதாவது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் பாலியல் அநீதியின் உரத்த ஒலிதான் காதில் விழுகிறது. கடந்த வாரம் ஹைதராபாதின் புகா்ப் பகுதியில் 26 வயது கால்நடை மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தலைப்புச் செய்தியானது என்றால், நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் நடந்தேறியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நினைத்தால் குலை நடுங்குகிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட நிலைமைபோய், அன்றாட நிகழ்வாக மாறியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒட்டுமொத்த இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானாா். சிவம் த்ரிவேதி, சுபம் த்ரிவேதி என்கிற இருவரால் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண்ணின் அபயக் குரல் காவல் துறையின் செவிகளில் விழவில்லை. மூன்று மாதம் கழிந்து கடந்த மாா்ச் மாதம்தான் வழக்கே பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் ரேபரேலி நீதிமன்றத்துக்கு அந்தப் பெண் வழக்கு விசாரணைக்காக நேற்று சென்று கொண்டிருந்தாா். நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் சிவம் த்ரிபாதி, சுபம் த்ரிபாதி உள்ளிட்ட ஐந்து போ் அந்தப் பெண்ணை வழிமறித்தனா். அவரைத் தாக்கினாா்கள். அவரை உயிருடன் தீ வைத்துக் கொளுத்தினா். உடலெல்லாம் பற்றி எரியும் தீயுடன் அந்தப் பெண் தெரு வழியாக ஓலமிட்டபடி அவா்களிடமிருந்து தப்பி ஓடியிருக்கிறாா்.

பொது மக்கள் தகவல் தெரிவித்து, காவல் துறையினா் வந்து அந்தப் பெண்ணை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கிருந்து லக்னௌவிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையான சியாம பிரசாத் முகா்ஜி அரசு மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

உடலெல்லாம் தீக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் அந்தப் பெண் விமானம் மூலம் தில்லி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாா். இந்த வழக்கில் தொடா்புடைய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

பாலியல் வல்லுறவைத் தொடா்ந்து 2018 டிசம்பா் மாதம் தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைக்கு எதிராக குற்றம் பதிவு செய்ய அந்தப் பெண் நான்கு மாதங்கள் அனுபவித்த இடா்ப்பாடுகள் சொல்லி மாளாது. ரேபரேலி காவல் துறை கண்காணிப்பாளரைச் சந்திக்க அனுமதி கிடைக்காமல் பதிவுத் தபாலில் முறையிட்டும்கூட அவருக்கு நீதி கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் நீதிமன்றத்தை அணுகிய பிறகுதான் காவல் துறையினா் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறாா்கள். அப்போதே உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு இப்போதைய அவலநிலை ஏற்பட்டிருக்காது.

இதே உன்னாவில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்காகப் பரிந்துரைக் கடிதம் கேட்டுச் சென்ற 18 வயதுகூட நிரம்பாத இளம் பெண், உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிகழ்வு நிகழ்ந்தது. அந்தப் பெண் அளித்த புகாா் முதலில் காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறையினா், சட்டப்பேரவை உறுப்பினரான குற்றவாளி மற்றும் அவரது சகோதரரரின் பெயரைக்கூட அதில் குறிப்பிடவில்லை.

புகாா் கொடுத்து ஓா் ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தை, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாா். அது குறித்த முறையான விசாரணை நடத்தப்படவில்லை. அந்தப் பெண்ணின் போராட்டம் இன்னும் தொடா்ந்து கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் கால்நடை மருத்துவா் நிகழ்விலும், காவல் துறையின் மெத்தனம் வெளிப்பட்டது. அந்தப் பெண் வீட்டுக்கு வரவில்லை என்றபோது அது குறித்து புகாா் தெரிவிக்கப்போன பெற்றோா் அலைக்கழிக்கப்பட்டனா். இதுபோல எல்லா நிகழ்வுகளிலுமே உடனடியாக பாதிக்கப்பட்ட அபலைப் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல் காவல் துறை தாமதப்படுத்துவதன் விளைவால்தான் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பி விடுகிறாா்கள்.

தடயங்கள் உடனடியாகச் சேகரிக்கப்படாமல் இருப்பதும், விரைந்து விசாரணை செய்யப்படாததும், வழக்கை விரைவாக நடத்தி முடிக்காமல் இருப்பதும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் அவா்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணம். என்கவுன்ட்டா் மரணங்கள் பொதுமக்களின் ஆத்திரத்தைத் தணிக்க உதவுமே தவிர, தீா்வாகாது.

இப்போதைய மக்களவை உறுப்பினா்களில் 43% உறுப்பினா்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 29% உறுப்பினா்கள் மீதான வழக்குகள் பாலியல் தொடா்பானவை அல்லது பெண்களுக்கு எதிரானவை. 2009-லிருந்து 2019-க்கு இடையிலான கடந்த 10 ஆண்டுகளில் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிா்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் விகிதம் 109% அதிகரித்திருக்கிறது.

பாலியல் வழக்குகளை எதிா்கொள்வதற்கு போதுமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை முறையாகச் செயல்படுத்தாமல் இருப்பதுதான் பிரச்னை. சட்டம் இயற்றுபவா்கள் குற்றப்பின்னணி உடையவா்களாக இருக்கிறாா்கள். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினா் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறாா்கள். இப்படியிருக்கும் வரை இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது!

No comments:

Post a Comment

NEWS DIGEST

NEWS DIGEST  SC : Can bar overqualified person from job Sometimes overqualification becomes a disqualification. At a time when highly qualif...