Wednesday, December 17, 2014

மனநிறைவைத் தரும் விஷயம் இது.

கல்வி என்பது அறிவைப் பெருக்கிக் கொள்ள என்பதில் இருந்து, நல்ல சம்பளம் ஈட்டுவதற்காக என்று மாறி பல ஆண்டுகளாகி விட்டது. நல்ல சம்பளம், சமூகத்தில் மரியாதை என்று இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சுமார் 1015 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மவுசு, நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கின.
தற்போது நாட்டில் மிகவும் உயர்ந்த கல்வி நிறுவனமாக அனைவராலும் பார்க்கப்படுவது ஐ.ஐ.டி. என்கிற இந்திய தொழில்நுட்ப மையங்கள்தான். நாடு முழுவதும் 16 ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பலத்த வரவேற்பு கிடைக்கிறது.

இந்த ஐஐடிகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மிகப்பெரிய திருவிழாதான். அதாவது அந்த கல்வியாண்டில் படிப்பை முடிக்கும் மாணவர்களை, தங்களுடைய நிறுவனங்களுக்கு கொத் திச் செல்ல பல்வேறு நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடங்கின. முதல் நாளிலேயே, ஆண்டு சம்பளம் ரூ.1.50 கோடி என்று மாணவர்களைக் கவர்ந்தன பல வெளிநாட்டு நிறுவனங்கள். மிகக் குறைந்த ஆண்டு சம்பளமே ரூ.30 லட்சம்.

ஆனாலும் ஒரு கோடி ரூபாய் ஆண்டு சம்பளம், பல்வேறு சலுகைகள், வெளிநாட்டில் வேலை என்று வாய்ப்பு வந்தபோதும், சில மாணவர்கள் அந்த வாய்ப்பை உதறித் தள்ளியுள்ளனர். அவ்வாறு மூன்று மாணவர்கள், ஒரு மாணவி இந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறிய காரணம்  தங்களுடைய படிப்புக்கு, திறமைக்கு ஏற்றதாக இந்த வேலை இல்லை என்று ஒரு மாணவனும், ஒரு மாணவியும் கூறியுள்ளார். மிகவும் குறைவான சம்பளம் கிடைத்தபோதும், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ள நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். மற்ற இருவர், தொடர்ந்து மேற்படிப்பு படிக்க உள்ளதால், அந்த வேலைவாய்ப்பை உதறியுள்ளனர்.

மாணவர்கள் சம்பளத்துக்காக மட்டுமே படிக்கவில்லை. தங்களுடைய திறமையை மதிக்கும், அது மேம்படுத்தக் கூடிய இடத்தைச் தேடி செல்கின்றனர். சம்பளத்தை இழந்தாலும், தங்களுடைய சுயசிந்தனையை இந்த மாணவர்கள் இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது போன்ற இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. மனநிறைவைத் தரும் விஷயம் இது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024