Wednesday, December 24, 2014

இயக்குநர் சிகரம் கே.பி!



அனைவராலும் ‘கே.பி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் தமிழ் சினிமா உள்ளவரை பேசக்கூடிய அளவுக்கு பல சாதனைகளைச் சேர்த்துவைத்துவிட்டுச் சென்றுள்ளார்!

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். சிறுவயதிலேயே மேடை நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதியும் இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படிப்பில் சேர்ந்து படித்தவர், தொடர்ந்து மேடை நாடகக் கலையுடன் தொடர்பிலேயே இருந்தார்.



கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு சென்னைக்கு வந்து, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக்குழுவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு நாடகக்குழுவை ஏற்படுத்தினார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நவக்ரஹம் போன்ற நாடகங்களை அவரே தயாரித்து இயக்கினார்.

எம்.ஜி.ஆர் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது; எழுதினார். அந்தச் சமயத்தில், தான் பணியாற்றிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வந்தது. இதற்கிடையே இவரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏ.வி.எம் செட்டியார், அதை கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குநர்களைக்கொண்டு நாகேஷை ஹீரோவாக நடிக்கவைத்து தயாரித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இவரின் இன்னொரு நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் படமாக எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்றது.

1965-ல் 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல்...' என தன் நாடகங்களையே படமாக எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய ‘பாமா விஜயம்’ இவரை டிரெண்ட் செட்டர் இயக்குநர் ஆக்கியது. இவரின் ‘இருகோடுகள்’ சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. ‘அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவன் இல்லை...' என இவர் இயக்கிய படங்கள் விமர்சனம், வியாபாரம், சர்ச்சை என ஏதோ ஒருவகையில் மக்களிடம் சென்றடைந்துகொண்டே இருந்தது. ‘ஏக் துஜே கே லியே’ இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது.

இவரின் படங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததாலும், அவை பெரும்பாலும் சமூக அரசியல் விஷயங்களையே மையப்படுத்தியவையாக அமைந்தன. இந்தியப் பெண்களின் நிலை, அவர்களின் பரிதாப நிலைகளை இவரின் படங்கள் பேசின. ‘பார்த்தாலே பரவசம்’ இவரின் 100-வது படம். ‘பொய்’ கே.பி இயக்கிய 101-வது படம். அதோடு சினிமா இயக்குவதை நிறுத்திக்கொண்டாலும் சினிமா ரசிகராக இளைய தலைமுறைக் கலைஞர்களை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தி வந்தார்!

சின்னத் திரையிலும் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை நிகழ்த்தினார். இவரின் முதல் தொலைக்காட்சி தொடர் 'ரயில் சிநேகம்.' 1990-ல் தூர்தர்ஷனுக்குகாக எடுத்தார். ‘கையளவு மனசு’ இவரின் டிரெண்ட் செட்டர் சீரியல். மெகா சீரியல் என்ற கான்செப்ட்டை ‘ரகுவம்சம்’ மூலம் துவக்கிவைத்தார். இவர் தமிழ் சினிமாவில் 65-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். கமலஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் அதில் பிரபல ஆளுமைகள்!

கே.பியின் படைப்புகள் அவரின் நினைவை என்றும் நம்முடன் அழுத்தமாகப் பதித்திருக்கும்!

- ம.கா.செந்தில் குமார்

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...