Thursday, December 18, 2014

மாணவிக்கு நள்ளிரவுக்குள் மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடெல்லி

திருச்சி மருத்துவ கல்லூரியில் மாணவி சாகித்யாவுக்கு நள்ளிரவுக்குள் இடமளிக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப இரவு 12 மணி வரை அலுவலகத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தகுதி பெற்றவர்கள்

தமிழகத்தை சேர்ந்த மாணவி கே.சாகித்யா மற்றும் மாணவர் எல்.கணபதி நாராயணன் ஆகிய இருவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இந்தியா முழுவதும் அனுமதி வழங்கியதன் அடிப்படையில், தமிழகத்தின் திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளும் சில நிபந்தனைகளோடு 50 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப்பிரிவில் 150 இடங்களை 2014–15–ம் ஆண்டில் நிரப்பலாம் என்று அனுமதிக்கப்பட்டன. இதன்படி மனுதாரர்கள் இருவரும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.

69 சதவீத இடஒதுக்கீடு

ஆனால் மேற்குறிப்பிட்ட இரு மருத்துவ கல்லூரிகளும் தமிழக அரசு அறிவித்தபடி 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் பொதுப்பிரிவை சேர்ந்த 46 மாணவர்களே இந்த கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மனுதாரர்கள் இருவரும் 197.25 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அந்த கல்லூரிகளில் அனுமதி கிடைக்கவில்லை.

இது ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது. எனவே மனுதாரர்களுக்கு அந்த மருத்துவ கல்லூரிகளில் அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.

நள்ளிரவுக்குள் அனுமதி

இந்த மனு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் வாதாடினார். தமிழக அரசு சார்பில் வாதாடிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆகியோர், சாகித்யா மட்டுமே அனுமதிக்கு தகுதியுடைவர் என்றும், கணபதி சுப்பிரமணியத்துக்கு தகுதி இல்லை என்றும் கூறினார்கள்.

உடனே, மாணவி சாகித்யாவுக்கு தகுதி இருக்கிறது என்றால் அவர் ஏன் இதுவரை அனுமதிக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவி சாகித்யாவை இன்று (நேற்று) நள்ளிரவுக்குள் திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

திறந்திருக்க வேண்டும்

மேலும் மாணவி கல்லூரியில் சேரும் வகையில் இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி வரை கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.

மற்றொரு மனுதாரரான கணபதி சுப்பிரமணியத்தின் மனு மீது நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...