Tuesday, May 1, 2018

அரசு அனுமதியின்றி மருத்துவ படிப்புகள் : எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு தடை கோரி வழக்கு

Added : மே 01, 2018 02:11

சென்னை: மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகளுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலர், டாக்டர் கே.சீனிவாசன் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெறாமல், முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்துகிறது. தொலைதுார கல்வி திட்டத்தின் வாயிலாக நடத்தப்படும், குடும்ப மருத்துவ படிப்பு மற்றும் வலி நிவாரண படிப்புக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் பெறப்படவில்லை. மேலும், மருத்துவ அறிவியல் வகுப்புகளில், ஒன்பது படிப்புகளுக்கும், மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லை.எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, மருத்துவ அறிவியலில், ௧௧ முதுநிலை பட்டய வகுப்புகளை நடத்த முற்பட்டபோது, அதை எதிர்த்து, ௨௫ டாக்டர்கள் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம், ரத்து செய்து உத்தரவிட்டது. மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் அனுமதி பெறாமல், அண்ணாமலை பல்கலையும், ௧௫ வகுப்புகளை நடத்த முற்பட்டது. அதை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க, தடை விதித்தது.எனவே, மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசின் அனுமதியின்றி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்தும் வகுப்புகள், சட்டவிரோதமானவை. தற்போது, அனுமதியின்றி நடத்தப்படும், முதுநிலை மருத்துவ பட்டய வகுப்புகள் மற்றும் மருத்துவ அறிவியல் படிப்புகளை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, இந்த படிப்புகளை நடத்த, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி, வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், பி.எபனேசர் பால் வாதாடினார். மனுவுக்கு, பதில் அளிக்கும்படி, மத்திய சுகாதார துறை, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...