Saturday, June 4, 2016

இந்த கேள்விக்கு மட்டும் பா.ஜ.க.வினர் பதில் சொன்னால் போதும்! -அப்படி என்ன கேள்வி கேட்கிறார் கருணாநிதி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்புரை வழங்கி பேசும்போது, ''இந்த விழாவில் என்னை பாராட்டவும், நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தவும் நீங்கள் இங்கு கூடியதை பார்க்கும்போது, பிற்போக்கு தன்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இத்தனை ஆண்டுகள் இன்னும் வாழ வேண்டுமா என்ற கேள்வி என்னை துளைக்கிறது. நீங்கள் அனைவரும் அண்ணா சொன்னதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கழகத்தை நடத்த நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்து கூறியதைப்போல, தி.மு.க. ஆட்சியில் கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கினோம். பிச்சைக்காரர்களுக்கு கூட மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். குடிசைகளை எல்லாம் கோபுரங்களாக ஆக்கினோம். எந்த புது நோக்கமானாலும் அதை நிறைவேற்றும் சாத்தியமான ஆட்சியாக தி.மு.க. இருந்தது. அதை வீழ்த்த இன்று ஏதோதோ சூழ்ச்சிகள் செய்கிறார்கள். அது எந்த அளவுக்கு போய் இருக்கிறது.
நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேர்தல் முடிவு நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடியே காலை 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செல்கிறார் என்றால், தேர்தல் முடிவு எப்படி முன்கூட்டியே தெரிந்தது. இதை வெளிப்படையாக, பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இதற்கு, டெல்லியில் உள்ள மோடியின் கட்சிக்காரர்கள் விளக்க வேண்டும். அதற்கு முன்பே ஓட்டை எண்ணிப்பார்த்துவிட்டார்களா?. இந்த கேள்விக்கு மாத்திரம் அவர்கள் பதில் சொன்னால் போதும்.

ரூ.570 கோடி வங்கியில் இருந்து பணம் மாற்றப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் என்ன?. மத்திய அரசுக்கு மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு என்ன?. ஒரு போராட்டத்தை நடத்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு என்றால் குறிப்பிட்ட தேதியில் அந்த தேர்தல் நடக்கும் என்று பொருள். அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தான் ரத்து செய்திருக்கிறார்கள். அதை எண்ணிப்பார்த்து உண்மையை உணர்த்த வேண்டும். இதை கட்டளையாக எடுத்துக்கொள்ளாமல், அறிவிப்பாக எடுத்துக்கொண்டு நாம் அத்தனை பேரும் ஒன்றுகூடி தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று கேட்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

நமக்கு நாமே என்ற உறுதியோடு அந்த தேர்தலை சந்திக்க வேண்டும். ஜனநாயகம் இப்படி சீரழிந்த நிலையில் உள்ளது. ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள சீரழிந்த நிலையை, மூடிமறைக்க நினைக்கும் இந்த செயலை, தி.மு.க.வை ஒழிக்க நடக்கும் இந்த திரைமறைவு வேலையை செய்யும் தேர்தல் ஆணையத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...