Wednesday, June 8, 2016

ரகளை அமைச்சர்... ராஜினாமா செய்த பெண் டிஎஸ்பி... கையைப் பிசையும் கர்நாடக அரசு!

vikatan news
ர்நாடகாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயின் ராஜினாமா விவகாரம். கூடவே இன்று அனுபமா ஷெனாய் தன் முகநூல் பக்கத்தில்,  " நான் ராஜினாமா செய்து விட்டேன். நீ எப்ப ராஜினாமா செய்ய போகிறாய்?"  என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கிற்கு பகிரங்க சவால் விட்டிருப்பதால்,  பரபரப்பு இன்னும் அதிகமாக பற்றிக்கொண்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் அனுபமா ஷெனாய். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பதவியேற்றார். இப்பகுதியில் போலி மதுபான  கடைகளும், அங்கீகாரம் இல்லாத பார்களும் ஏராளமாக இருந்தன. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்  கடைகளை அதிரடியாக இழுத்து மூடி பரபரப்பை உண்டாக்கினார்.

இதுவிர  பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நேர்மையாகவும், திறம்படவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சமூக விரோதக் கும்பல்களின் அடாவடிகளை ஒழித்துக் கட்டி, நிழல் உலகத்தினருக்கு கிலியை ஏற்படுத்தினார். 

அமைச்சர் தலையீடு
இந்நிலையில் கடந்த ஜனவரியில், பொதுமக்கள் திரண்டு வந்து டி.எஸ்.பி. அனுபமாவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்கள். அந்த மனுவில் , ‘‘ஹடல்கி நகர் பகுதியில், பொதுமக்கள் குடியிருப்புக்கு அருகே லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் ரவீந்தரருக்கு சொந்தமான பார் இருக்கிறது. இந்த பாரில் தினந்தோறும் குடித்து விட்டு குடிமகன்கள் பெரும் சத்தம் போடுகிறார்கள். இதனால் குழந்தைகள் படிக்க முடியவில்லை. அத்தோடு திடீர் திடீரென,எங்களின் வீடுகள் மீது கற்களால் தாக்குகிறார்கள். அதனால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், எங்களின் வீட்டில் இருக்கும் பெண்களின் கையைப்  பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். இதனால் நாங்கள் அச்சத்தின் பிடியில் தத்தளிக்கிறோம். குடிமகன்களின்  தொடரும் இந்தத் தொல்லைகளால் சமூக அமைதி சீரழிந்துவிட்டது. எனவே மதுபான பார் கடையை  அகற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கண்ணீர் கோரிக்கையைடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கினார் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய். பிரச்னைக்குரிய பார் இயங்கும் ஹடல்கி நகர் சென்று, அதிரடியாக பாரை இழுத்து மூடினார். அதற்கு லோக்கல் காங்கிரஸ் பிரமுகரான ரவீந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கை சந்தித்து முறையிட்டார். விசயத்தை கேள்விப்பட்டு கொதித்த அமைச்சர்,  ரவீந்தர் முன்பே, டி.எஸ்.பி. அனுபமா ஷெனாய்க்கு  போன் செய்திருக்கிறார். 

அனுபமா போனில் அமைச்சரின் அழைப்பு ரிங் வந்து கொண்டிருக்கும் போதே, தன் துறையை சார்ந்த உயர் அதிகாரியின் போன் அழைப்பும் வர, 10 நிமிடங்களுக்கு அமைச்சரின் அழைப்பை  வெயிட்டிங்கில் போட்டு விட்டு தன் துறை அதிகாரியிடம் பேசி இருக்கிறார்.  துறை அதிகாரியிடம் பேசி முடித்த பிறகு அமைச்சரின் அழைப்பை 'அட்டன்' செய்திருக்கிறார். இதனால் வெய்ட்டிங்கில் இருந்த அமைச்சர் பரமேஷ்வர் நாயக், கோபத்தில் சினிமா வில்லன் பாணியில் கடுமையாக மிரட்டியிருக்கிறார். 

ஆனால், அதற்கு அனுபமா சற்றும் பணிந்து போகாமல், " நான் செய்தது சரிதான். மக்கள் பணி செய்வதற்காகத்தான் இந்த துறைக்கு வந்தேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் பார்க்கலாம்" என்று  சொல்லி,போன் இணைப்பைத் துண்டித்து இருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் பரமேஷ்வர் நாயக், அனுபமாவை 'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவிட்டார். கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது இந்த விவகாரம்.

அமைச்சரின் அடாவடித் தனத்திற்கு பொதுமக்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. உடனே அதில் மாநில அரசு தலையிட்டு, அனுபமாவின் இடமாற்றத்தை ரத்து செய்தது.  அதையடுத்து தொடர்ந்து ஆளும் அரசியல் கட்சியினரால் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய்க்கு டார்ச்சர் வந்து கொண்டே இருந்தது. 

ராஜினாமா

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கர் பவன் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு, ரவீந்தர் தன் பாரை விரிவாக்கம் செய்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்கல் தலித் அமைப்புகள் அனுபமாவை சந்தித்து புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதையடுத்து பார் உரிமையார் ரவீந்தரை அழைத்து, பாரை விரிவாக்கம் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் அனுபமா. ஆனார் ரவீந்தர் அந்த உத்தரவு நகலை கிழித்துப் போட்டு விட்டு, "விரிவாக்கம் செய்வேன். நீ செய்வதை செய்" என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுபமா, கடந்த சனிக்கிழமை (4.6.2016) பாரின் உரிமையாளர் ரவீந்தர் மற்றும் இருவரை கைது செய்து பெல்லாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது அங்கு வந்த சிலர் அனுபமாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரை அசிங்கமாகவும் ஆபாசமாகவும்  பேசியுள்ளனர். இதனால் மனம் வெறுத்த நிலையில், அனுபமா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

இதுப்பற்றி மாவட்ட எஸ்.பி., சேத்தன், ‘‘அனுபமா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். ஹடல்கியில் உள்ள அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை, உரிமையாளர் ரவி விரிவுப்படுத்தி இருக்கிறார். அந்த பணி நடந்தால் அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையின் அகலம் குறையும் என்று சில தலித் தலைவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பாரின் உரிமையாளர் ரவியை அழைத்து, பாரின் விரிவாக்கத்தை நிறுத்துமாறு டி.எஸ்.பி., உத்தரவிட்டார். ஆனால் பார் உரிமையாளர் ரவி அதைக் கேட்கவில்லை. இதையடுத்து ரவி மற்றும் 2 பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்’’ என்றார். 

காவல்துறை அதிகாரிகளை மாற்ற அமைச்சர்களுக்கு  அதிகாரம் இல்லை...

‘‘இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது பல புகார்கள் குவிந்து வருகின்றன. போலீஸார் இடமாற்றத்தில் கடந்த ஒன்றரை வருடத்தில் 45 பரிந்துரைகளை காவல்துறைக்கு கொடுத்து கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளார். டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் இடமாற்ற உத்தரவுக்கும் இவர்தான் காரணம். பிறகு பல தரப்பினரும் எதிர்ப்பு  தெரிவித்ததால் ரத்து செய்யப்பட்டது. 2013 ஜூன் முதல் 2015 ஜனவரி வரை தனக்கு தேவைப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பெல்லாரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். 

உதாரணமாக பெல்லாரி சிட்டி டி.எஸ்.பி., முருகநன்னவார் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளை  அங்கேயே பதவியில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 2014 ஜூன், 10ம் தேதி  பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலக டி.ஜி.பி., ஐ.ஜி.,க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு சி.ஐ.டி., டி.எஸ்.பி.,ரவிசங்கர் நாயக்கை பெல்லாரி மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை செய்து, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை காவல்துறை நிர்வாக வாரியம்தான் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட அதிகாரமில்லை.’’ என்கிறார் ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர் வினோத்.  

முதல்வர் ரியாக்‌ஷன்


முதல்வர் சித்தராமையா, ‘‘அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்று கூறி உள்ளார். 

'நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை'

இதுபற்றி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரிகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட பெண் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினால் மட்டுமே மாநிலத்தில் அனுபமா ஷெனாய் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்படும். 

ஆனால் முதல்வர் சித்தராமையா நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத்  தெரியவில்லை. அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, 'சட்டம் தனது கடமையை செய்யும்' என முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருப்பது பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக உள்ளது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது’’ என்று காட்டமாக கூறியுள்ளார்.


ஃபேஸ்புக்கில் சவால் விட்ட அனுபமா

இந்நிலையில் ராஜினாமா செய்த டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,' நான் ராஜினாமா செய்து விட்டேன். மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லும் நீ எப்பொழுது ராஜினாமா செய்யப் போகிறாய்?' என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளது கர்நாடகம்  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்றும், " முதல்வர் சித்தராமையா 'ரம் ராஜ்ஜியம்' நடத்திக்கொண்டிருப்பதாக அனுபமா தனது ஃபேஸ்புக் பதவில் குற்றம் சாட்டி இருந்தார்.
 அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக தாம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக தமக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அனுபமா குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் அவ்வாறு வழக்குப்பதிவு செய்தால் அது இன்னும் கூடுதலான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என தயங்கிக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.  

என்று தீரும் காவல்துறையில் அரசியல் தலையீடு? 

-வீ.கே.ரமேஷ்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...