Friday, June 17, 2016

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள்; 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

THE HINDU

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் சாகும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரண தண்டனை இல்லை:

குற்றவாளிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 69 பேரை உயிருடன் எரித்துக் கொன்று கொடுஞ்செயல் புரிந்துள்ளதால், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் உட்பட யாருக்குமே மரண தண்டனை வழங்கப்படவில்லை.

வழக்கு பின்னணி:

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போது, குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. மொத்தம் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர், ஒருவரைக் காணவில்லை. இவ்வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பலமுறை ஒத்திவைப்பு:

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கின் தண்டனை விவரம் பலமுறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கில் கொலை குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...