Monday, June 27, 2016

கட்டண சலுகையை விட்டு கொடுங்கள்..! -மூத்த குடிமக்களை கேட்கும் ரயில்வே துறை

புதுடெல்லி: சமையல் கியாஸ் மானியத்தை தாமாக முன்வந்து விட்டு கொடுப்பதுபோல, மூத்த குடிமக்களும் ரயில் பயணக் கட்டணச் சலுகையை விட்டு கொடுக்க முன் வரலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

ரயில்வே துறைக்கு பயணிகள் ரயில் மூலம் ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை மத்திய அரசு வழங்கும் மானியம் மூலம் ரயில்வே துறை ஈடு செய்கிறது. இந்நிலையில், சமையல் கியாஸ் மானியத்தை தாமாக முன்வந்து விட்டு கொடுப்பது போல, மூத்த குடிமக்களும் ரயில் பயண சலுகையை விட்டு கொடுக்க முன் வரலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே துறைக்கு ஏற்படும் மானிய சுமை மற்றும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. 58 வயது நிரம்பிய பெண்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு பயணக் கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், பயணிகளுக்காக ரயில்களில் முதியோர், விளையாட்டுத்துறையில் பதக்கம் பெற்றவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 55 பிரிவினருக்கு பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
இதற்காக கடந்த நிதியாண்டில் ரூ.1,600 கோடியை மானியமாக ரயில்வே துறை செலவழித்து உள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களின் சலுகைக்காக மட்டும் கடந்த ஆண்டில் ரூ.1,100 கோடியை ரயில்வே துறை மானியமாக செலவழித்துள்ளது. அதே வேளையில் சாதாரண பயணிகள் செலுத்தும் பயணக் கட்டணத்திலும் பயணத்துக்கு ஏற்படும் செலவில் முழு தொகையை ரயில்வே துறையால் பெற முடியவில்லை.

அதாவது ஒருவரின் பயணத்துக்கு ஏற்படும் செலவில் 57 சதவீதத்தை மட்டுமே அவர் செலுத்தும் கட்டணத்தில் இருந்து பெற முடிகிறது. அந்த வகையில் ஒரு பயணியின் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பதை பயணச்சீட்டுகளின் கீழ் அச்சடிக்கும் புதிய முறையை ரயில்வேத்துறை கடந்த சில நாட்களாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மானியத்தை குறைக்கும் வகையில் முதியவர்கள் தாமாக முன்வந்து சலுகையை விட்டு கொடுக்கும் புதிய முறையை ரயில்வே துறை அமல்படுத்தி உள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ''முதியவர்கள் பயணச்சீட்டு பெறும் முன்பாக தாங்கள் சலுகையை பெற விரும்பவில்லை என்பதை குறிப்பிடுவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சலுகையை பெற விரும்பாதவர்கள் முழு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கேற்ற வகையில் தொழில்நுட்பங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது" என்றார்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...