Tuesday, June 7, 2016

ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

எம்ஜிஆர் 100 | 80 - ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

‘நான் ஏன் பிறந்தேன்’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை ஆஸ்திரேலிய தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம் (வலது) சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் மணியன் உள்ளார்.

M.G.R. தான் நடிக்கும் படங்களின் கதை அமைப்பை ஒட்டி பாத்திரத்துக்கேற்ப, அதன் தேவைக்கேற்ப நடிப்பார். பெரும்பாலும் ஆக் ஷன் படங்களில் நடித்ததால், அவருடைய அற்புதமான நடிப்புத் திறன் பெரிதும் கவனிக்கப்படாமல் போனது.
எம்.ஜி.ஆர். தனக்கென்று நடிப்பில் தனிப் பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர். மு.க.முத்து உட்பட பல நடிகர்கள் அவரது பாணியைப் பின்பற்றி நடித்தார்களே தவிர, அவர் யாருடைய பாணியையும் பின்பற்றியதில்லை. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் கோழையாகவும் வீரனாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். அதில் ராமு என்ற பெயரில் கோழையாக வரும் பாத்திரத்தின் அறிமுகக் காட்சியில் இருந்து கடைசியில் அவருக்கு வீரம் வரும்வரை, முகத்தில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். பயத்தின் வெளிப்பாடாக நெஞ்சுக்கு நேரே இரு கைகளையும் கோர்த்தபடி உடல் மொழியை வெளிப்படுத்தி இருப் பார்.
நம்பியாருக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறி ஓட்டலுக்கு எம்.ஜி.ஆர். சாப்பிட வருவார். இரண்டு இட்லி வாங்கி ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்ட பின், சுற்றிலும் எல்லோரையும் பார்த்தபடி ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். வெளி உலகில் பயமின்றி சுதந்திரமாக அவர் சாப்பிடும் முதல் இட்லி அது என்பதை அந்த சிரிப்பிலேயே உணர்த்தி இருப்பார்.
‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தில், தான் எடுத்து வளர்க்கும் குழந்தையிடம், ‘‘நீ வளர்ந்து பெரிய வனாகி விமானத்தில் வந்து இறங்கும் போது நான் கூட்டத்தில் நிற்பேன். என்னை கவனிக்காமல் போய்விடுவாய்’’ என்று எம்.ஜி.ஆர். பரிதாபமாக சொல்லும் காட்சி கண்கலங்க வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நகைச்சுவைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர். பிய்த்து உதறுவார். நகைச் சுவைப் படமான ‘சபாஷ் மாப்பிளே’ படத்தை பேரறிஞர் அண்ணா பார்த்து விட்டு, ‘‘சபாஷ் எம்.ஜி.ஆர்!’’ என்று பாராட்டினார். சண்டை, நடனக் காட்சி களில் கேட்கவே வேண்டாம். உடன் நடிப்பவர்களை ‘ஓவர் டேக்’ செய்யும் முனைப்பு எம்.ஜி.ஆரிடம் இருக்காது. கதைக்கேற்ப, அந்தந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அளவோடு, மென்மை யாக, இயல்பான நடிப்பை வெளிப் படுத்துவார்.
இப்போதெல்லாம் ‘இயற்கையான நடிப்பு’ என்று பரவலாக பேசப்படுகிறது. அதை அந்தக் காலத்திலேயே செய்தவர் எம்.ஜி.ஆர்.! அவரது இயற்கையான நடிப்பு வெளிநாட்டவர்களையும் கவர்ந் தது. அதனால்தான் ஆஸ்திரேலியாவின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம், ‘‘இயற்கையாக நடிக் கும் இந்திய நடிகர் எம்.ஜி.ஆர்.’’ என்று பாராட்டினார். சென்னை வந்தபோது எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசிய மெக்கலம், பின்னர் அவருடன் சேர்ந்து கூட்டாக படம் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்தார். பிறகு, அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி அரசியலில் பிஸியானதால் அது நிறைவேறவில்லை.
‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக, 1971-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதுக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் ‘இதய வீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென் றிருந்தார். காஷ்மீர் வானொலி அவரிடம் பேட்டி கண்டது. ‘பாரத்’ விருது பற்றிய கேள்விக்கு தனது வழக்கமான அடக் கத்தோடு எம்.ஜி.ஆர். பதிலளித்தார். ‘‘நான் இதை எதிர்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் இருந்த காரணத்தால், இதை நம்பு வதற்கே சிறிது நேரம் ஆனது’’ என்றார்.
காஷ்மீர் வானொலிக்கு பேட்டியளிக் கும்போது, உருது மொழியிலேயே பதிலளித்தார். அதற்காக, அந்த மொழி சொற்களின் உச்சரிப்பைக் கேட்டுப் பயின்று உருதுவில் பதிலளித்து காஷ்மீர் மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கொல்கத்தாவில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருதை அப்போதைய மேற்கு வங்க முதல்வரும் ‘தேசபந்து’ சி.ஆர்.தாஸின் பேரனுமான சித்தார்த்த சங்கர் ரே வழங்கினார்.
‘வணிக ரீதியிலான ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு எப்படி ‘பாரத்’ விருது கொடுக்கலாம்?’ என்று சர்ச்சை எழுந்தது. விருது வழங்கப்பட்டதற்காக சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடந்தபோது அவர் இதற்கு பதிலளித்தார்.
‘‘இந்த விருதுக்கு நான் தகுதியில்லை என்று கூறுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பாரத்’ விருது 1971-ம் ஆண்டுக்கு மட்டும்தான். என் வாழ்க்கை முழுவதும் நான் இந்தியத் துணைக் கண்டத்தின் சிறந்த நடிகன் என்ற பொருளில் அல்ல. கலைக்கு ஒரு வரையறையை யாருமே நிர்ணயித்துவிட முடியாது. இதைப் புரிந்துகொண்டால் பொறாமைக்கும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் இடமே கிடையாது’’ என்று எம்.ஜி.ஆர். பேசினார்.
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலியானதால் அப்போது தனக்கு மத்திய அரசு அளித்த ‘பத்ம  ’ விருதை ஏற்க மறுத்ததாகவும் இப்போது அந்த நிலை இல்லை என்றும் எம்.ஜி.ஆர். தெரி வித்தார். மேலும், ‘நாடோடி மன்னன்’ படத்தை எகிப்து நாட்டு படவிழாவுக்காக வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டதன்பேரில் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் ஆனால், கடைசி நேரத்தில் படம் தேர்வு செய்யப்படவில்லை என் றும் ‘‘நான் என்ன தவறு செய்தேன்?’’ எனவும் அந் தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். உருக்கமாகக் கேள்வி எழுப்பினார்.
அந்தப் பேச்சு பின்னர், ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் அவர் குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற முகப்பு படத்துடன் ஒருமணி நேரம் ஓடக்கூடிய ஒலிநாடாவாக வெளிவந்தது.
திமுக அரசின் பரிந்துரையின் பேரில்தான் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது வழங்கப்பட்டதாக அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு, அரசியல்ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன. சர்ச்சைகள் தொடர்வதை விரும்பாத எம்.ஜி.ஆர்., விருதை திருப்பி அனுப்பினார்.
‘பாரத்’ விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மட்டுமல்ல; அதைத் திருப்பிய முதல் நடிகரும் அவர்தான் என்று எம்.ஜி.ஆரின் பெயரை வரலாறு தன் பக்கங்களில் பொறித்துக் கொண்டது!
எம்.ஜி.ஆரின் இயற்கையான நடிப்பை பாராட்டி ஜான் மெக்கலம் கருத்து தெரிவித்த நாளிதழ் செய்தி.
நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெளியானபோது, மக்களை கவரும் வகையில், அதுவரை இல்லாத புதுமையான விளம்பர உத்தி பயன்படுத்தப்பட்டது. படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்டன.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...