Saturday, June 4, 2016

மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? - டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன் 14!



vikatan.com

டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. 'இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடியை சந்திக்க டெல்லிக்குச் செல்கிறார் ஜெயலலிதா.

“ டெல்லிக்குச் செல்வதன் முக்கிய நோக்கமே, பா.ஜ.க அரசில் அங்கம் வகிப்பதைப் பற்றி விவாதிக்கத்தான்” என்கிறார் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகி ஒருவர். அவரே தொடர்ந்து, " நாடாளுமன்றத்தில் 37 எம்.பிக்களுடன் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக அ.தி.மு.க அங்கம் வகிக்கிறது. மேல் சபையிலும் அ.தி.மு.கவின் தயவு மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது. தவிர, பா.ஜ.க அரசு கொண்டு வரவிருக்கிற பல மசோதாக்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசின் மீதுள்ள இரண்டரை லட்சம் கோடி கடன் சுமை, அரசை வழிநடத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயமும் அ.தி.மு.க தலைமைக்கு இருக்கிறது. இவற்றைத் தீர்க்க வேண்டுமானால், மத்திய அரசின் தயவு இல்லாமல் நிறைவேற்ற முடியாது. ஏற்கெனவே, மத்திய அரசில் துணை சபாநாயகர் பதவியை வகித்து வருகிறார் தம்பிதுரை. அதே சமயம் கூட்டணியில் இணைவதைப் பற்றி எந்தப் பிடியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் முதல்வர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இது அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தலில்கூட, பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க சீட் வழங்கலாம் என பா.ஜ.கவின் ஒருபிரிவினர் பேசி வந்தனர். ‘ இதனால் சிறுபான்மை ஓட்டுக்கள் கிடைக்காது’ என்பதால் அ.தி.மு.க தலைமை செவிசாய்க்கவில்லை. இப்போது மத்திய அரசில் அங்கம் வகிப்பது சரியானதாக இருக்கும் என்ற முடிவுக்கு முதல்வர் வந்துவிட்டார்" என்றார் விரிவாக.

“ இந்த முடிவை தேர்தலுக்கு முன்பே எடுத்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ‘ தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தீர்மானிக்கலாம்’ என அமைதியாக இருந்தார். இதுவரையில், மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்தும் எதிர்த்தும் வந்தது. இனி பா.ஜ.க கொண்டு வரும் மசோதாக்களை பகிரங்கமாகவே ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் ஜெயலலிதா. இனி வரும் காலங்களில் தமிழக சட்டமன்றத்தில் அரசின் கடன் பிரச்னை, தேர்தல் வாக்குறுதிகள் போன்றவை அ.தி.மு.கவுக்கு தீவிர தலைவலியாக மாற இருக்கின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான நிதியைப் பெறுவதற்கு, மத்திய அரசோடு இணக்கமான உறவோடு இருந்தால்தான் முடியும் என்று முதல்வர் நம்புகிறார். எனவே, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்காமல், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அரசுக்கு, அ.தி.மு.க பக்கபலமாக இருக்கும். அடுத்து வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமையவும் இது அச்சாரமாக இருக்கும்” என்கிறார் பா.ஜ.கவின் தமிழக நிர்வாகி ஒருவர்.

இதுகுறித்து அ.தி.மு.கவின் தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் பேசினோம். “ இது முழுக்க தி.மு.கவின் திட்டமிட்ட சதி வேலை. மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ‘அ.தி.மு.கவுடன் பா.ஜ.கவுக்கு ரகசிய உறவு இருக்கிறது’ என்றெல்லாம் அவதூறு பேசினார்கள். அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில், யாருடனுடம் ரகசியக் கூட்டணியை வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முழுக்க முழுக்க நேர்மையான முறையில்தான் யாரிடமும் கூட்டணி வைப்பார் அம்மா.

தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசோடு இணக்கமான போக்கை, அம்மா கடைபிடித்து வருகிறார். மத்திய அரசில் அங்கம் வகித்து குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டிய பதவிகளை வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்துதான் நாள்தோறும் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர். இதுபோன்ற அவதூறு செய்திகளைப் பரப்பி எங்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் தி.மு.க இறங்கினால், மேலும் மேலும் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள்” என்றார் கொந்தளிப்போடு.

இருப்பினும் ஜெயலலிதா எப்பொழுது எத்தகைய முடிவெடுப்பார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கே யூகிக்க முடியாத ஒன்று. எனவே ஜெயலலிதா டெல்லி செல்லும் 14 ம் தேதியன்று கூட்டணி மேகங்கள் கலையுமா... ஒன்றுகூடுமா? என்பதற்கான விடை தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...