உலகின் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான சிரின் லேப்ஸ், சுமார் ஒன்பது லட்சம் மதிப்பிலான உலகின் அதிக விலை உயர்ந்த சொலாரின் (solarin) என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தைக் கொண்டது. ராணுவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் விதமாக அதி உயர்வான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்மார்ட்போன் என்றும் செல்லமாக குறிப்பிடப்படும் இந்த ஸ்மார்ட்போன் லண்டனில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சொலாரின் போன் குவால்கம் ஸ்நாப்டிராகன் 810 பிராசரை கொண்டு இயங்கும். இதன் மூலம் உயர்தர வை - பை இணைப்பு கிடைக்கும். 23.8 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன், 5.5 அங்குல ஐபிஎஸ் எல்இடி 2,000 ரெசலுஷன் திரையும் கொண்டது.
மிகச் சிறந்த உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் இந்த போன் தற்போது அவர்களது சில்லரை விற்பனையகங்களில் மட்டுமே கிடைக்கும். இதற்காக இந்த நிறுவனம் தொலைத்தொடர்பு பாதுகாப்பு நிறுவனமான கூல்ஸ்பான் என்கிற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் அதி உயர்வான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன் தேவைதான் இதன் உருவாக்கத்துக்கு காரணம். அதே நேரத்தில் இதர போன்களைவிட செயல்பாடுகளும் வேகமாக இருக்க வேண்டும். இதற்காக உலக அளவில் சிறந்த பொருட்களைக் கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.