Sunday, March 12, 2017

சொத்து விற்றதில் கிடைத்த பணம் அண்ணனுக்கு தராத தம்பிக்கு சிறை

பூர்வீக சொத்தை விற்றதில், அண்ணனுக்கு உரிய பங்கு பணத்தை தராமல் ஏமாற்றிய தம்பிக்கு, மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, சைதாப்பேட்டை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

சென்னை, அடையாறு சாந்தி காலனியைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை, நான்கு பேரும் சேர்ந்து, 2011ல், 39 லட்சத்திற்கு விற்றனர்.
சொத்தை வாங்கியவர், நான்கு பேருக்கும் தலா, 9.56 லட்சம், பிரித்து கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பிரேமாவின் இளைய மகன் பாலன் பெயருக்கு, முழுத்தொகையையும் வரைவோலையாக கொடுத்துள்ளார். 

பாலன் அந்தத் தொகை யை சகோதரர் மற்றும் சகோதரிக்கு பிரித்துக் கொடுக்கவில்லை. அதனால், 'தனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை' என, அவரின் சகோதரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அவருக்கு சேர வேண்டிய தொகையை, பாலன் கொடுத்ததால் வழக்கு முடிக்கப்பட்டது.
அதேபோல, பாலனின் அண்ணன் நீலகண்டனும், தனக்கு தர வேண்டிய பங்கு பணத்தை தராமல் தம்பி ஏமாற்றுவதாக, 2014ல், சாஸ்திரி நகர் போலீசில் புகார் கொடுத்தார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு நடந்து வந்த போது, நீலகண்டன் இறந்து விட்டார். அதனால், அவரது மனைவி திலகவதி, வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். 

சைதாப்பேட்டை, ௯வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சங்கர் சமீபத்தில் தீர்ப்பளித்தார்.
அதில், சொத்தை விற்றதில், அண்ணனுக்குரிய பங்கை தராமல் ஏமாற்றிய பாலனுக்கு, மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

அபராதத்தை கட்டத் தவறினால், மேலும், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கில், அரசு சார்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார். இருப்பினும், தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பாலன் அப்பீல் செய்ய, ௨௦ நாட்கள் அவகாசம் தரப்பட்டது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...