Monday, June 25, 2018

தொழில் தொடங்கலாம் வாங்க! - 03: காதலும் தொழிலும் எப்படி ஒன்றாகும்?

Published : 21 Feb 2017 10:45 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 



தொழில் செய்ய என்னதான் தகுதி வேண்டும்? ஆசை வேண்டும். ஒரு தொழிலை உருவாக்கி, பின் ஸ்திரப்படுத்தி அதைத் தொடர்ந்து லாபகரமாக நடத்தும் ஆசை வேண்டும். நம்மில் பலருக்குத் தொழிலில் வரும் பணம் மீது ஆசை இருக்கிறது. ஆனால் அதைத் தொழிலாக நடத்தும் முனைப்பு இல்லை.

பிறர் சொல்லிக் காதல் வருமா?


பெட்டி கடை போட்டவரெல்லாம் மாடி வீடு கட்டிட்டார் என்று பொறாமைப்படாமல் மட்டும் போதாது. காலை 6 முதல் இரவு 10 வரை கடையில் உட்கார்ந்து பொருள் வாங்குவது முதல் விற்பது வரை செய்யும் அந்த முனைப்பு இருக்க வேண்டும். தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் பாராமல், தொழிலே உலகம் என வாழும் அளவு முனைப்பு உள்ளதா!

தானாகத் தன்னை இயக்கிக் கொள்ளும் உந்துசக்தி தொழில் முனைவோருக்கு அத்தியாவசியம். தொழில் முனைவோர் என்றாலே சொந்தமாக ஆசைப்பட்டுத் தனியாகத் தொழில் செய்போர் என்று பொருள் கொள்ளலாம். பிறர் சொல்லிக் காதல் வருமா? அது போலத்தான் சொந்தத் தொழிலும்.

பலருக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் கண்ணில் படும். அற்புதமாக ஐடியாக்களை அள்ளிக் கொட்டுவார்கள். ஆனால் முதல் அடி எடுத்து வைக்காதவரை இவர்கள் எல்லாம் நாற்காலி ஆலோசகர்கள்தான். காலம் கடந்த பின்பு இவர்கள் சொல்வார்கள், “நிறைய ஐடியாக்கள் இருந்துச்சு. ஆனால் கை தூக்கி விட ஆளில்லை!”. தூக்கி விட ஆள் தேடுபவர்கள் சொந்தமாகத் தொழில் ஆரம்பிப்பது கடினம். ஆரம்பித்தாலும் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம்.

முனைப்பு வேண்டும்

நம் கல்வி அமைப்பு பணியாளர்களுக்கான மன நிலையை உருவாக்குவதிலும், ஒரு அமைப்பு சார்ந்து இயங்குவதை ஆதரிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கம்பெனிக்கு ஆள் எடுக்கக் கொண்டு வந்ததுதானே மெக்காலே திட்டம்! இதனால்தான் சுயச் சிந்தனை, கேள்வி கேட்கும் சுதந்திரம், ஆய்வு மனப்பான்மையைத் தேட வேண்டியுள்ளது.

தொழில் நிர்வாகத்துக்குப் படிக்கும் எம்.பி.ஏ. மாணவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானோர் மட்டுமே தனியாகத் தொழில் செய்ய விரும்புவதாகச் சமீபத்திய நிர்வாகக் கல்வி ஆய்வு தெரிவிக்கிறது. இதனால்தான் தீவிரத் தொழில் முனைவு எண்ணம் கொண்டவர்கள் பாரம்பரியக் கல்வி முறையை விரைவில் துறந்துவிடுகின்றனர். படித்து விட்டு ஸ்திரமான வேலையில் உட்கார்ந்து சொன்ன வேலையைச் செய்யும் மனோபாவம் சொந்தத் தொழில் ஆரம்பிக்க உதவாது.

ரிஸ்கை சமாளி!

முதல் தேவை முனைப்பு என்றால் இரண்டாம் தேவை ரிஸ்க் எடுக்கும் மனோபாவம். “எனக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏனென்றால், ரிஸ்க் என்பது பணயம் வைப்பது போல. ஒரு ஸ்பெகுலேஷன் தன்மை உண்டு. வந்தால் வரும். வராமலும் போகும். பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதுதான் risk taking-ன் அடி நாதம். முதலீடு போடுகிறோம். எவ்வளவு திரும்ப வரும் என்று தெரியாது. துணிந்து முதலீடு செய்ய முடியுமா? இதுதான் ரிஸ்க்.

“40 வயசு வரை சம்பாதிச்சிட்டு, ஈ.எம்.ஐ. இல்லாம இருந்து, வீட்டில் இன்னொரு வருமானம் இருந்து, குடும்பத்தை எதுவும் பாதிக்காதுன்னா நானும் தொழில் செய்வேன்” என்று நீங்கள் சொன்னால் உங்களுக்குப் பாதுகாப்பு உணர்வு மிக அதிகம். ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள் என்று பொருள். சொந்தத் தொழில் என்று நினைப்பவர்கள் இந்தப் பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில்தான் தொழில் பற்றிய முடிவு இருக்கும். தங்கள் பாதுகாப்பு, வசதி, சவுகரியம், கவுரவம் என்று எதையும் விடத் தயாராகாதவர்கள் சொந்தத் தொழில் செய்வது கடினம்.

எல்லாவற்றையும் இழக்கும் அபாயத்தில், அகலக் கால் வைத்து ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால், “அவசியம் இல்லை”தான். கணக்கிட முடியாத ரிஸ்க் அவசியமில்லை. ஆனால் calculated risk இல்லாமல் பிஸினஸ் இல்லை.

ஒரு பாட்டில் ஆவதல்ல!

தொழில் செய்ய மற்றொரு ஆதாரக் குணம் கடின உழைப்பு. ஆரம்பக் காலத்தில் மட்டுமல்ல. வெற்றி பெற்ற பின்னும் இந்த உழைப்பு அவசியம், தொழிலைத் தக்க வைக்க. உழைப்பின் வடிவமும் வீச்சும் மாறலாம். ஆனால் என்றும் உழைப்பு தேவை. நினைத்துப் பார்க்காத வேலையை, நினைத்துப் பார்க்காத சமயத்தில் தீவிரமாகச் செய்ய நேரிடலாம். அந்தத் தயார் நிலை அவசியம்.

முக்கியமாக ஈகோ பார்க்காமல் வேலை செய்வது, சமரசங்களுடன் வாழப் பழகுவது, எதிர்பாராத சூழலைச் சமாளிப்பது, என்றும் ஒரு மாணவனைப் போலக் கற்றுக் கொள்ளும் மன நிலையோடு தொடர்ந்து உழைப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக, ஒரு பாட்டில் கோடீஸ்வரர் ஆக முடியாது.

இத்தனைக்குப் பிறகும் ‘சொந்தத் தொழில்’ என்று உறுதியுடன் நிற்பவர்களுக்கு நான் சொல்லும் முல்லா கதை இதோ: சூஃபியான முல்லா பேச்சைக் கேட்கப் பெரும் கூட்டம் வந்திருந்தது. அவர் வர ஒரு மணி நேரம் தாமதமாகச் சிலர் வெளியேறினர். வந்தவர் குடித்து விட்டு வந்ததால் வேறு சிலரும் புறப்பட்டனர். பேசத் தொடங்கியதும் தகாத சொற்களால் திட்டியதால் பெரும்பாலானோர் மனம் வெறுத்துக் கிளம்பினர். அதற்குப் பிறகும் வெகு சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்த முல்லா, “நீங்கள்தான் என் பேச்சைக் கேட்க வந்தவர்கள்” என்று சொல்லி அற்புதமான உரையை நிகழ்த்தினாராம்.

முல்லா உரை போலதான் சொந்தத் தொழிலும். எல்லாச் சோதனைகளையும் தாண்டி முனைப்புடன் உள்ளவர்களுக்குத் தேடி வந்தது கை கூடும்!

“எல்லாம் எனக்குப் பொருந்துகிறது. எல்லாவற்றுக்கும் நான் தயார். என்ன தொழில் என்று முடிவு எடுப்பதில்தான் சிக்கல் உள்ளது!” என்று கூறுகிறீர்களா?

உங்களுக்கு ஏற்றத் தொழில் எது என்று எப்படிக் கண்டு பிடிப்பது?

கண்டு பிடிப்போம். நாம் சேர்ந்து கண்டு பிடிப்போம்!


தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

Dismissal from service should be reserved for grave misconduct: SC

Dismissal from service should be reserved for grave misconduct: SC The Supreme Court ruled that dismissal from service should be imposed on...