Wednesday, December 27, 2017

அரசியலில் குதிப்பதா? இல்லையா? 31-ந்தேதி அறிவிப்பேன் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

அரசியலில் குதிப்பதா? இல்லையா? 31-ந்தேதி அறிவிப்பேன் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
அரசியலில் குதிப்பதா? இல்லையா? என்பதை 31-ந்தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 
 
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ண கிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அடையாள அட்டை இல்லாத ரசிகர்களும் திரண்டு வந்தார்கள். அவர்களை உள்ளே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த ரசிகர்கள் மண்டப வாயிலில் நின்று ரஜினிகாந்தை வாழ்த்தியும், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தும் கோஷம் போட்டபடி இருந்தனர்.

ராகவேந்திரா மண்டபத்தை சுற்றிலும் “வருங் கால முதல்வரே, முடக் கத்துடன் இருக்கும் தமிழகத்தை அடக்கத்துடன் ஆட்சி செய்ய வா, புனித போர் முழக்கத்தால் விடியும் வேளை வரப்போகுது, போருக்கு தயாராகும் மக்கள் சக்தியே” என்றெல்லாம் சுவரொட் டிகள் ஒட்டி இருந்தனர்.

ரசிகர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களே உங்களுக்கு என் அன்பான வணக்கம். நான் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் இரண்டு மாதம் கழித்து விடுபட்ட ரசிகர்களை சந்திப்பது என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் ‘காலா’ படப்பிடிப்பால் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு சந்திக்க முடியாமல் போனது.

அதன் பிறகு மழை வந்தது. தொடர்ந்து மண்டபமும் காலியாக இல்லை. அதனால் அப்படியே தள்ளிப்போய் இப்போது அந்த நல்ல நேரம் வந்து இருக்கிறது. உங்களையெல்லாம் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். உங்களை பார்க்கும்போது எனக்கு புத்துணர்வு ஏற்படுகிறது.

எனது பிறந்த நாளில் 28, 30 வருடமாக நான் வீட்டில் இருப்பது இல்லை. அன்று மட்டும் தனியாக இருக்க ஆசைப்படுவேன்.

அதனால் வெளியூர் போய்விடுவேன். ஆனால் இந்த பிறந்த நாளுக்கு எனது வீட்டுக்கு நிறைய ரசிகர்கள் வந்து ஏமாற்றத்தோடு திரும்பியதாக கேள்விப்பட்டேன். வருத்தமாக இருந்தது. என்னை தவறாக நினைக்க வேண்டாம். நிறையபேர் என்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். வரும் காலங்களில் அதை பார்க்கலாம்.

அரசியல் விஷயமாக நான் என்ன சொல்லப்போகிறேன். எனது முடிவு என்ன? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ ஊடகங்களுக்கு ரொம்ப ஆர்வம். போர் வரும்போது பார்க்கலாம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். போர் வந்தால்தான் பார்ப்பீர்களா? போர் வந்து விட்டதா? ஏன் சேருகிறார்கள், இழுக்கிறார்கள். ‘பில்டப்’ கொடுக்கிறார்கள், என்றெல்லாம் பேசப்படுகிறது.

அரசியலுக்கு நான் புதுசு இல்லை. 1996-ல் இருந்தே அரசியலுக்கு நான் வந்து இருப்பதால் அதில் என்ன கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது, அதில் இருக்கும் ஆழம் என்ன? என்பதையெல்லாம் தெரிந்து இருக்கிறேன். அதனால்தான் தயங்குகிறேன். தெரியாமல் இருந்திருந்தால் ‘ஓ.கே’ என்று சொல்லி வந்து விடலாம்.

யுத்தத்திற்கு போனால், ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும்.

அரசியல் விஷயத்தில் நான் இழுப்பதாக சொல்கிறார்கள். வருகிற 31-ந்தேதி எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெரிவிக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை. 31-ந்தேதி நான் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை சொல்லப்போகிறேன்.

ரசிகர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம். குடும்பம், தாய், தந்தை, குழந்தைகளை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். பசங்களை நன்றாக படிக்க வையுங்கள். நிறைய ஊடகங்கள் வந்து விட்டன. சமூக ஊடகங்களும் வந்து விட்டன. எதிர்மறை சிந்தனை, எதிர்மறை விஷயங்களை மனதுக்குள் எடுத்துக்கொள்ளாதீர்கள். நேர்மறையாகவே சிந்தியுங்கள்.

அப்பாவை பையன் கொலை செய்தான். பையன் அம்மாவை கொலை செய்தான். என்பதையெல்லாம் நீங்கள் பார்க்காதீர்கள். அது மனதை கண்டிப்பாக பாதிக்கும். வெளியில் போய் வந்து முகத்தை துடைத்தால் அழுக்கு இருப்பது தெரியும். அதே மாதிரி எதிர்மறை சிந்தனைகள் இருந்தால் அவை மனதில் தங்கி விடும்.

அதை எடுக்க வேண்டும் என்றால் தியானம் செய்ய வேண்டும் அல்லது நல்ல கருத்துகளை உள்ளே வைக்க வேண்டும். எனவே எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...