Friday, December 15, 2017

முகம் நூறு: கைகளே மூலதனம்

Published : 10 Dec 2017 10:36 IST




பழம்பெரும் கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் சுவைமிகு அப்பளத்துக்கும் பெயர்பெற்ற ஊராக மாறிவருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களாலேயே இது சாத்தியமானது.

காஞ்சிபுரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பளத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள்.

வருமானத்தை விழுங்கும் இடு பொருட்கள்

அப்பள நிறுவனங்கள், உளுந்து மாவை மட்டும் வாங்கி முகவர்கள் மூலம் இவர்களுக்குக் கொடுத்துவிடுகின்றனர். நிறுவனம் கொடுக்கும் 100 கிலோ மாவுக்கு அரிசி மாவு உள்ளிட்ட துணைப் பொருட்களைச் சேர்த்து அப்பளமாகச் செய்து 120 கிலோ அப்பளத்தை இந்தத் தொழிலாளர்கள் முகவரிடம் கொடுக்கின்றனர். அதைத் தரம்பார்த்து நிறுவனங்கள் விற்பனைக்கு அனுப்புகின்றன.

பல பிரபல நிறுவனங்களின் பெயர்களில் வரும் சுவை மிகுந்த அப்பளங்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்களின் கைவண்ணத்தில் உருவானவைதான். இந்தப் பெண்களுக்கு ஒரு கிலோ அப்பளம் செய்வதற்கு ரூ.70 கூலியாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 முதல் 14 கிலோ அப்பளம் செய்ய முடியும் என்று இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

“அப்பளம் செய்வதற்கு அரிசிமாவு, உப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைச் சேர்க்க வேண்டியுள்ளது. இந்தப் பொருட்களை எங்களுக்குக் கிடைக்கும் கூலியில் இருந்து நாங்கள்தான் வாங்குகிறோம். 14 கிலோ அப்பளத்துக்கு எங்களுக்கு ரூ.980 கிடைத்தால் அதில் சுமார் 50 சதவீதத் தொகை இந்தப் பொருட்களுக்குச் செலவாகிவிடும்” என்கிறார் ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரி.


ஒலிமுகமதுபேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட அப்பளத்தைச் சுத்தம் செய்து அடுக்கும் பெண்கள்

தொழிலதிபர்களாகும் விருப்பமும் வாய்ப்பும்

மூலப் பொருட்களை வாங்கி உழைப்பைச் செலுத்தித் தயாரிக்கும் அப்பளங்களை அவர்களே விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்தப் பெண்கள் பலர் விரும்புகின்றனர்.

கூட்டுறவு நிறுவனங்களைத் தொடங்கி அப்பளத் தொழிலுக்கும் விற்பனை வாய்ப்பை உருவாக்கும் யோசனையும் சில பெண்களிடம் உள்ளது.

“ஒரு கிலோ உளுந்து மாவு ரூ.100, ஒரு கிலோவுக்கு கூலி ரூ.70. என ரூ.170 செலவில் இடுபொருட்களுடன் சேர்த்து 1.2 கிலோ அப்பளம் செய்யப்படுகிறது. இந்த அப்பளத்தின் விலை தரத்துக்குத் தகுந்தாற்போல் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. எங்களுக்கு விற்பனை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் தொழிலாளர்களாக இருக்கும் நாங்கள் தொழிலதிபர்களாகும் வாய்ப்புகள் உள்ளன” என்று அவர்கள் சொல்வதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

அப்பளம் தயாரிக்கும் தொழிலுக்கு இயந்திரங்கள் ஏதும் தேவையில்லை. தங்கள் சொந்தக் கைகளை நம்பியே பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். முதலீடு என்று பார்த்தால் உளுந்து மாவும் அரிசி மாவும் மட்டும்தான். இவர்களுக்கு அரசு கூட்டுறவு நிறுவனங்களைத் தொடங்க, சிறுதொழில் கடன்களை வழங்கி, விற்பனை வாய்ப்புகளை உருவாக்கினால் அப்பளத் தொழிலாளர்களின் மையமாக இருக்கும் காஞ்சிபுரம் அப்பள உரிமையாளர்களின் மையமாக மாறும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.




காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

கவனம் கோரும் பிரச்சினைகள்

நிறுவனங்களுக்கு அப்பளங்களைச் செய்து கொடுக்கும் பெண்களிடம், சில முகவர்கள் ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் எனக் கடன் தந்துவிட்டு அதற்காக மிகக் கடுமையான உழைப்பை வாங்கிக்கொள்வதாகச் சிலர் குற்றம்சாட்டுக்கின்றனர். இதனால் பலர் ஓய்வில்லாமல் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் அப்பளம் காய வைக்க இடம் கிடைக்காதது உள்ளிட்ட சிக்கல்களாலும் இவர்களது தொழில் பாதிக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...