Tuesday, January 16, 2018

மின் கட்டணம் வசூலில் முறைகேடு இரு பொறியாளர்கள், 'சஸ்பெண்ட்'

Added : ஜன 16, 2018 01:16 |
 
கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பை துண்டிக்காமல், துண்டிப்பு செய்தது போல், பதிவேட்டில் பதிவு செய்த, இரண்டு உதவி பொறியாளர்களை, மின் வாரியம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.


வீடு, கடை உள்ளிட்ட மின் இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள், கட்டணத்தைச் செலுத்த வேண்டும்; இல்லை
யெனில், இணைப்பு துண்டிக்கப்படும். 


கையூட்டு


பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் சப்ளை வழங்கப்படும்.
பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் சிலர், குறித்த காலத்தில் கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பை துண்டிப்பதில்லை. 


ஆனால், துண்டித்தது போல், அலுவலக பதிவேட்டில் பதிவு செய்கின்றனர். இதற்காக அவர்கள், அந்த நுகர்வோர்களிடம் கையூட்டு பெறுவதாக கூறப்படுகிறது.


துண்டிப்பு


இது தொடர்பான புகாரில், மின் வாரியம், தற்போது அதிரடியாக, இரண்டு உதவி பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


குறித்த காலத்தில் கட்டணம் செலுத்தாத, மின் இணைப்புகளின் விபரத்தை, தினமும் எடுத்து, வணிக ஆய்வாளர், போர்மேனிடம் வழங்குவார். 


அவர், அந்த பட்டியலை, ஒயர் மேன், மின்பாதை ஆய்வாளரிடம் வழங்குவார். அவர்கள், சம்பந்தப்பட்ட இணைப்புகளில், மின்சாரத்தை துண்டிப்பர்.


அந்த இணைப்புகளில், முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என்று, கணக்கீட்டு ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும். அந்த விபரத்தை, வணிக ஆய்வாளர், அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.


மின் இணைப்பு துண்டித்த, மூன்று மாதங்களுக்குள், அபராதத்துடன் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பை நிரந்தரமாக துண்டித்து, மீட்டர் அகற்றப்பட வேண்டும்.


இந்த அனைத்து பணிகளையும், உதவி பொறியாளர் கண்காணிக்க வேண்டும். ஆனால், பலர், இந்த வேலைகளை ஒழுங்காக செய்வதில்லை. 


வீடுகளில், குறித்த காலத்தில், மின் கட்டணம் செலுத்தவில்லை எனில், உடனே இணைப்பை துண்டிக்க காட்டும் ஆர்வத்தை, கடை, தொழிற்சாலை, வணிக வளாகம் போன்ற, வணிக இணைப்புகளில் காட்டுவதில்லை. 


அவர்கள், மின் இணைப்பை துண்டிக்காமல், துண்டித்தது போல், அலுவலக பதிவேட்டில் பதிவு செய்கின்றனர்.


இது போன்ற முறைகேடுகளால், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 


ஆய்வு


இது தொடர்பான புகாரில், தற்போது, ஆலந்துார், குன்றத்துார் பகுதிகளைச் சேர்ந்த, இரண்டு உதவி பொறியாளர்கள் மற்றும் வணிக பிரிவு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
அனைத்து அலுவலகங்களிலும், இது தொடர்பான ஆய்வு முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...