"வாலியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”
ரஹ்மானின் இசைப்புயலுக்குத் தயாராகிறது சென்னை. 2018-ன் முதல் அரங்காக சென்னையில் மிகப்பெரிய இசைத்திருவிழாவை நடத்தவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்தேன்.``புதிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் சவால் எப்படி இருக்கிறது?”
``இறைவன் படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகத்தான் இருக்கும். எதிர்பார்க்காத ஆச்சர்யமெல்லாம் சில திறமையாளர் களிடமிருந்து கிடைக்கும். சக்தி ஸ்ரீகோபாலன் அப்படித்தான் கிடைத்தார். அடிப்படையில் அவர் ஒரு ஆர்க்கிடெக்ட். வேறொரு வேலைக்காக வந்தவர், மணிசாரிடம் “என்னுடைய சி.டி. கேட்டிருக்கீங்களா?” என்று கேட்க, அப்போதுதான் அவர் பாடகி என்பதே தெரிந்தது. ‘இந்த முறை என்ன சர்ப்ரைஸ் கிடைக்கும்... ஏதாவது புதுசா கேட்கமுடியுமா?’ என்ற கேள்வியோடுதான் இளம் பாடகர்களைத் தேடுவேன். இப்போது ‘7-UP தமிழ்நாட்டின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் புதிதாக ஏழு குரல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.’’
“சர்வதேச அளவில் இந்தியாவின் இசைமுகமாக நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள். இந்த 25 ஆண்டு இசைப்பயணம் பற்றிச் சொல்லுங்கள்?”
``என் அம்மாவுக்கு நான் இசைத்துறைலதான் வரணும்னு ஆசை இருந்தது. என்னைச் சுத்தி நல்ல மனிதர்கள் இருந்தாங்க. இப்ப 25 வருஷங்கள் ஆகிடுச்சான்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு. எல்லாப் புகழும் இறைவனுக்கே!”
“சின்ன வயதிலிருந்தே நீங்கள் பிஸிதான். வாழ்க்கையில் எதை மிஸ் பண்ணுவதாக நினைக்கிறீர்கள்?”
``பெருசா எதையும் மிஸ் பண்ணலைன்னுதான் தோணுது. சின்ன சின்ன விஷயங்கள் சில இருக்கலாம். ஆஸ்கர் விருது வாங்கினப்புறம், நாலு வருஷம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துல குடும்பத்தோட தங்கியிருந்தேன். அப்போ அங்க ஒரு கார் வெச்சிருந்தேன். ஃபேமலியக் கூட்டீட்டு எங்கெங்க சுத்தணுமோ சுத்தினேன். அதுதான் இப்ப மிஸ் ஆகுதோனு தோணுது. மத்தபடி ஆல் இஸ் வெல்.”
“சமூக வலைதளங்களில் ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே?”
“நான் ட்விட்டர்ல ஆக்டிவா இருக்கேன். முதல்ல என்னோட YM மூவிஸ் நிறுவனத்தின் புரமோஷனுக்காகத்தான் சோஷியல் மீடியாவுக்குள்ளே வந்தேன். ஆனால், ரசிகர்களோட அன்பு, அளவிடவே முடியாத பாசம் என்னை அப்படியே கரைச்சிடுச்சு. ரசிகர்களோட தொடர்புல இருக்கிறதும் அவங்க அன்பை நேரடியா ஃபீல் பண்றதும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு.”
“இந்தியாவில் ரெகார்டிங் ஸ்டுடியோக்களின் தரம் எப்படி இருக்கு?”
``இப்ப ரெகார்டிங்கையெல்லாம் ஒரு லேப்டாப்லயே முடிக்கற அளவுக்கு அட்வான்ஸ் ஆகிடுச்சு. நிறைய புதிய முயற்சிகள், எக்ஸ்ட்ரார்டினரி சவுண்டிங்கை அதுல கொண்டு வரமுடியுது.”
“ரஹ்மான் எப்போது செம எனர்ஜியோட இருப்பார்?”
``நல்ல தூக்கம் இருந்தா! (சிரிக்கிறார்) அதுக்கப்புறம் அசாதாரணமான கலைஞர்கள்கூட வேலை செய்யறப்ப அந்த எனர்ஜி நமக்கும் தொத்திக்கும். வைரமுத்து, மணிரத்னம், ஷங்கர்னு இவங்ககூடவெல்லாம் வொர்க் பண்றப்ப எனர்ஜி பல மடங்கா இருக்கும். வாலி நான் ரொம்பவே மிஸ் பண்ற ஒரு கவிஞர். அவரோட லெகஸியும், எனர்ஜியும் அவ்ளோ ஆச்சர்யம். சின்னச் சின்னக் கதைகள் சொல்லுவார். அதையெல்லாம் இப்ப மிஸ் பண்றேன். அவரை ‘என்சைக்ளோபீடியா ஆஃப் மெனி திங்ஸ்’னு சொல்லலாம்!”
No comments:
Post a Comment