Wednesday, January 3, 2018


இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் காசோலை எழுதிவைத்துவிட்டு தம்பதியினர் தற்கொலை!

By DIN | Published on : 02nd January 2018 03:36 PM

சென்னை: சென்னையை அடுத்த போரூரில் இரு கணவர்களைப் பிரிந்த மகள் மற்றும் குடிபோதைக்கு அடிமையான மகனின் நடவடிக்கைகளால், கணவன் மனைவி இருவரும் தங்களின் இறுதிச்சடங்கு செலவிற்காக ரூ.2 லட்சம் காசோலை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல், புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான இவரது மனைவி ஜீவாவும், மத்திய அரசு ஊழியர் ஆவார். இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர். மனோகரனின் மகள் கார்த்திகா, இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் அவர்களை பிரிந்து தந்தை மனோகரனின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.



மகன் சரவணனும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதோடு, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரை பிரிந்து வந்துவிடுமாறு பெற்றோர் கூறியும் மகன் சரவணன் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனோகரனும் அவரது மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை முதலில் விஷமருந்திய மனைவி ஜீவா மயங்கி விழுந்த பின்னர், கணவன் மனோகரன் தனது மீது தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து மனோகரன் வீட்டிலிருந்து புகை வந்ததைக்கண்ட அருகிலிருந்தோர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



பின்னர் போலீஸார் மனோகரன் வீட்டில் நடத்திய சோதனையில், மனோகரன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். கடிதத்தில், தங்களது உடலை புதைக்காமல், எரித்து விடவும் என்றும், இறுதி சடங்கிற்காக தலா ரூ.2 லட்சம் என காசோலை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொள்வதாக மனோகரன் எழுதியிருந்தார்.

மேலும் தற்கொலை குறித்து உறவினர்கள் யார் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மனோகரன் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024