ரயில் டிக்கெட்டை முன்னதாக பதிவு செய்பவர்களுக்கு கட்டணச் சலுகை: பரிந்துரை ஏற்பு
By DIN | Published on : 19th January 2018 12:55 AM |
விமானத்தில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால் குறைந்த விலையில் கிடைப்பதுபோல, ரயில் டிக்கெட் முன்பதிவிலும் இதே திட்டம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. ரயில்வே கட்டண சீராய்வுக் குழு அளித்த இந்தப் பரிந்துரையை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, பதிவு செய்யப்படாமல் இருக்கும் இருக்கைகளுக்கு ஏற்ப 20 முதல் 50 சதவீதம் வரை கட்டணச் சலுகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்தால் கூட, அப்போது அதிக அளவு இருக்கைகள் முன்பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில், கீழ்நிலை படுக்கை வசதி (லோயர் பெர்த்) டிக்கெட்டை முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதுதவிர, ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரிக்கும்போது கட்டணத்தை உயர்த்தவும், தேவை குறைவாக இருக்கும்போது கட்டணத்தைக் குறைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகளை அந்தந்த ரயில்வே வாரியங்களே எடுக்கலாம். பயணிகள் அதிகம் ரயிலைப் பயன்படுத்தும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, அதிகம் பயன்படுத்தாக காலகட்டத்தில் கட்டணத்தை குறைக்கலாம்.
பயணிகளுக்கு வசதியான நேரத்தில் இயங்கும் ரயில்களுக்கு, உதாரணமாக இரவில் புறப்பட்டு காலையில் குறிப்பிட்ட ஊரைச் சென்றடையும் ரயில்களுக்கு சற்று கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் ரயில்வே கட்டண சீராய்வுக் குழு அளித்துள்ளது.
No comments:
Post a Comment