Tuesday, April 3, 2018

‘உயர்ந்த’ பாதசாரிகள் கவனத்துக்கு…

Published : 31 Mar 2018 11:37 IST

டாக்டர் பி. ராதாகிருஷ்ணன்

THE HINDU TAMIL


மனித உடலில் மிக அற்புதமான படைப்பு, பாதங்கள்! நரம்புகள், தசைகள், எலும்புகள் போன்றவை எல்லாம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள உறுப்புகள் அவை. நம்முடைய எடை எவ்வளவு அதிகரித்துக்கொண்டே போனாலும் நம்மைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைப் பருவம் முதல் முதுமைக் காலம்வரை பாதங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த பாதங்களைச் சிறப்பாகப் பராமரிக்கிறோமா? வலியும் பிரச்சினைகளும் தோன்றும்போதுதான் அந்தக் கேள்விக்கான பதில் ‘இல்லை’ என்பது புரியும்.

‘பாதங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று பொதுவாகக் கேட்டால், எல்லோருமே ‘செருப்பு அணிகிறோம்’ என்பார்கள். ஆனால், அளவு சரியில்லாத செருப்புகளை அணிந்துகொண்டு சிறிது தூரம் நடப்பதுகூடப் பாதங்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. அந்தச் செருப்புகளை அணிந்து நடந்தால் நரம்புகள், தசைகள், எலும்புகள் எல்லாவற்றுக்குமே நெருக்கடி ஏற்படும். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, அன்றாட வாழ்க்கையே முடங்கும் நிலைகூட ஏற்படலாம்.

தற்போது கால் பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! அதிலும் ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள். குறிப்பாக 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்களே குதிகால் செருப்புகளை அணிவதால், அவர்களே பெருமளவு ஆரோக்கியப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

செருப்பால் வருமா சிறப்பு?

இந்த உயர் குதிகால் செருப்புகள் பெண்களைக் கவர என்ன காரணம்? அவற்றின் அழகும் வடிவமைப்பும்தான். தவிர, எப்போதும் தட்டையான செருப்புகளை அணியும் பெண்கள், உயர் குதிகால் செருப்புகள் தங்களுக்குக் கம்பீரத்தைத் தருவதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

மேலும் வயதுக்கேற்ற, எடைக்கேற்ற சராசரியான உயரம் கொண்ட பெண்கள்கூட, தங்களைக் குட்டையாகக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாகவும், தன்னம்பிக்கை மேம்படுவதாகவும் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட தவறான எண்ணங்களால்தான் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் அவர்களுக்குப் பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

பாதத்துக்குப் பாதிப்பு

உயர் குதிகால் செருப்புகளைத் தொடர்ந்து அணியும்போது, விரல் பாதத்தோடு சேரும் பகுதி வளைந்துபோகும். அதோடு தசை அழுத்தத்தால் அந்தப் பகுதி கெட்டியாகி ஒருவிதக் கட்டிபோல் தோன்றும். அதற்கு ‘பூனியன்’ என்று பெயர். சிலருக்குப் பெருவிரல் வளைந்து பக்கத்து விரலின் மேல் பகுதிக்குப் போய்விடும். இதனால் பயங்கர வலி தோன்றும். குதிகால் உயர்ந்து, முனை கூர்மையாக இருக்கும் செருப்புகளை அணியும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

குதிகால் செருப்பணியும் பெண்களில் 60 சதவீதம் பேர் காலில் சுளுக்காலும், குதிகால் வலியாலும் அவதிப்படுகிறார்கள். குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாவிட்டாலும் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கப்பட்டு குதிகால் நரம்பு ‘விண்விண்’ எனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம். இந்த வலி அவர்களது அன்றாடச் செயல்பாடுகளை முடக்கிப்போட்டுவிடும்.

நீண்ட நேரம் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகளை அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். மேலும், முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழுங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

மசாஜ்… சுடுநீர்… வேண்டாம்!

உயர் குதிகால் செருப்புகள் அணிந்துகொண்டு அன்ன நடை நடப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குதிகால் வலியால் அவதிப்படுகிறார்கள். இதை ‘பிளான்டர் ஃபேசிட்டீஸ்’ என்று குறிப்பிடுகிறோம். இதற்கு அளவு சரி இல்லாத செருப்புகளும் தவறான வாழ்க்கை முறையும் காரணங்களாக இருக்கின்றன. உயர் குதிகால் செருப்புகள் குதிகாலைப் பொதிந்திருக்கும் தசைகளில் கீறலை ஏற்படுத்தும். அதோடு கால் பாதங்களில் முறிவையும் ஏற்படுத்தும். இதைத் தொடக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். பாதிப்பு முற்றிவிட்டால்,‘கீ ஹோல் சர்ஜரி’ தேவைப்படும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள், பாதப் பகுதியை மென்மையாகக்கொண்ட செருப்புகளையும், ‘ஹீல்ஸ்’ உயரமற்ற செருப்புகளையும் அணிய வேண்டும். அதோடு கால் பாதங்களுக்கும் மூட்டுக்கும் தேவையான பயிற்சிகளையும் அன்றாடம் செய்துவர வேண்டும். பல ஆண்டுகளாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள், பாதங்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

எந்தத் துறையிலும் உச்சத்தை அடையவும் தன்னம்பிக்கை அவசியம் , ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகள் தேவையா என்ற கேள்விக்கு நாமே பதில் அளித்துக்கொள்வோம்.
‘ஹை ஹீல்ஸ்’ பெண்கள் கவனிக்க வேண்டியவை

# குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ (உள்ளங்கால் பகுதிக்கானது) ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்கப் பாதுகாப்பானதாக இருக்கும்.

# குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி, ஓரங்களில் ‘லைனிங்’ செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற செயற்கை இழையால் செய்யப்படாமல், இயற்கையான தோலால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலுக்குக் காற்றோட்டம் தந்து பாதுகாப்பைத் தரும்.

# உயரமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அரை அடி உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும். 2 அங்குல உயரம் கொண்ட குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

# செருப்பின் முன் பகுதியில் மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி, திறந்தபடி இருக்க வேண்டும். அதையும் குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பைப் பெற்றிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.

# குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்துவைக்க வேண்டும். மாடிப் படி ஏறும்போது முன்னங்காலையும் குதிகாலையும் படியில் ஒன்றுபோல் சமமாகப் பதித்து ஏற வேண்டும். மாடிப் படியிலிருந்து கீழிறங்கும்போது காலின் முன் பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

# குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வராது. எனவே, குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

# குதிகால் செருப்பணிந்து நடப்பவர்கள், அவ்வப்போது காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் மற்ற இடங்களுக்குப் பரவி குதிகாலில் ஏற்படும் வீக்கம் குறையும்.

# கால் அளவைச் சரியாகக் கணித்து அதற்குப் பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி, செருப்பின் புற அழகில் மயங்கி கால் அளவுக்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

# பகல் முழுவதும் நடந்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, செருப்பு வாங்குவதற்கு காலை நேரத்தைவிட இரவு நேரம் ஏற்றது.

# அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் உடலுக்கு அவசியம். அதனால் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும்கூட ஒரு சில மணி நேரத்துக்கு மட்டுமே அணியுங்கள்.

கட்டுரையாளர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்
தொடர்புக்கு: radhakrishnan87@yahoo.co.in

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...