Tuesday, October 23, 2018

'வாட்ஸ் ஆப்'பில் வந்த வதந்தி:அலைக்கழிக்கப்பட்ட வாலிபர்கள்

கோவை,:ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடப்பதாக, 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய தகவலை நம்பி, கோவை வந்த நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



கோவை, அவிநாசி ரோட்டிலுள்ள, பி.ஆர்.எஸ்., மைதானத்துக்கு, நேற்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், வந்த வண்ணம் இருந்தனர்.

போலீஸ் விசாரணை

அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, கோவை, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடப்பதாக கிடைத்த

தகவலின்படி வந்ததாக தெரிவித்தனர். 'வாட்ஸ் ஆப்'பில் வந்த தகவலையும் போலீசாரிடம் காட்டினர்.அதில் கூறியிருப்பதாவது:இந்திய ராணுவ படை பிரிவான,122வது பட்டாலி யனுக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பை, இளைஞர்களே, தவற விடாதீர்கள். மத்திய அரசு பணியான இதற்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.உயரம், 162 செ.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். உடல் தகுதி, உடல்திறன், மருத்துவ சோதனை முறையில் தேர்வு நடத்தப்படும். முகாம் நடக்கும் நாள், 23.10.2018 - 27.10.2018. தேர்வு நடக்கும் இடம்: பி.ஆர்.எஸ்., மைதானம், கோவை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், 'இந்த தகவல்பொய்யானது, இதுபோன்ற எந்த ஆள்சேர்ப்பும் கோவையில் நடக்கவில்லை' என, போலீசார் தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் ராணுவப்படை பிரிவு அலுவலக

அதிகாரிகளும், 'ஆள்சேர்ப்பு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை' என, இளைஞர்களிடம் தெரிவித்தனர்.

பொய் தகவல்

'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதள தகவல்களை நம்பி ஏமாறக்கூடாது என, அந்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறி, திருப்பி அனுப்பினர்.'எங்களது எதிர்கால கனவுகளோடு விளையாடும், இதுபோன்ற பொறுப்பற்ற தகவல்களை பரப்பு வோரை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றபடியே, இளைஞர்கள் விரக்தியுடன் கலைந்து சென்றனர்.





No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024