Thursday, May 4, 2017

முதுகலை மருத்துவ படிப்பு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் : நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் ௩வது நீதிபதி விசாரணை

பதிவு செய்த நாள் 03 மே  2017  23:07

சென்னை: 'முதுகலை மருத்துவப் படிப்புகளில், அரசு பணியில் உள்ள டாக்டர்கள் சேர, தமிழக அரசு கொண்டு வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறை செல்லும்' என, ஒரு நீதிபதியும், மருத்துவ கவுன்சில் விதி முறையை பின்பற்றும்படி, மற்றொரு நீதிபதியும், மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். இதனால், மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு, இந்த வழக்கு செல்கிறது.முதுகலை மருத்துவப் படிப்புகளில், அரசு பணியில் உள்ள டாக்டர்கள் சேர இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளை பின்பற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம், ஏப்., 17ல் உத்தரவிட்டது. இதில் 'மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி, தொலைதுார பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன், 10 முதல், 30 சதவீதம் வரை, கூடுதல் மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்களில், 'தமிழக அரசு வெளியிட்ட விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்; பல ஆண்டுகளாக, இந்த நடை முறையே அமலில் உள்ளது. எனவே, மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்ற கூடாது' என, கூறப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'சிறப்பு பெஞ்ச்' அமைக்கப்பட்டது. அரசு டாக்டர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், வழக்கறிஞர்கள், எல்.சந்திரகுமார், திலகவதி, ஜி.சங்கரன் உள்ளிட்டோரும் அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், சிறப்பு பிளீடர் டி.என்.ராஜகோபாலன், மருத்துவ கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், வழக்கறிஞர், வி.பி.ராமன் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கில், நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: கிராமப்புறங்களில் டாக்டர்கள் பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில் மருத்துவ கவுன்சிலும், மாநில அரசும் உறுதியாக உள்ளன. அதற்காக, ஊக்க மதிப்பெண் வழங்கும் முறையே, வெவ்வேறாக உள்ளது. வரையறுக்கப்பட்ட பகுதிகளில், பணியாற்றும் டாக்டர்கள் அனைவரும் பலன் பெற, பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை, மாநில அரசு பின்பற்றுகிறது. ஊக்க மதிப்பெண் வழங்குவதில், வெவ்வேறு நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், மத்திய அரசு விதிமுறைக்கும் மாநில அரசின் கொள்கைக்கும் எந்த முரண்பாடும் இல்லை. எனவே மாநில அரசு பின்பற்றும் நடைமுறை செல்லும். மாநில அரசு வெளியிட்ட விளக்க குறிப்பேட்டை எதிர்த்து, இங்கே வழக்கு தொடரப்படவில்லை.

அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்தது சரியா என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, பதில் மனு பெற்று, முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில், அதை பரிசீலிக்க தேவையில்லை. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாநில அரசின் விளக்க குறிப்பேட்டில் கூறியுள்ள வழிமுறைகளின்படி, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:கல்வியில் குறைந்தபட்ச தரத்தை உறுதி செய்து, அனை வருக்கும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எனவே இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைக்கு முரணாக மாநில அரசின் விளக்க குறிப்பேட்டில் உள்ள சில பிரிவுகள், ரத்து செய்யப்படுகின்றன.மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறையை மாநில அரசு வகுக்க வேண்டும். அதன்படி முதுகலை மருத்துவப் படிப்புக்கான, தரவரிசை பட்டியலை தயாரிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு செல்கிறது. மூன்றாவது நீதிபதியின் உத்தரவைப் பொறுத்து, இந்த வழக்கில் முடிவு ஏற்படும்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...