Saturday, May 27, 2017

ஓய்வு பலன் கிடைக்காத விரக்தி: மாஜி ஊழியரின் கடிதம் வழக்கானது : அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பதிவு செய்த நாள்27மே2017 03:37

மதுரை:போக்குவரத்துக் கழகம் ஓய்வுக் கால பலன்களை வழங்காததால் 82 வயது ஓய்வு பெற்ற ஊழியர், நீதிபதிகளுக்கு எழுதிய கடிதம் அடிப்படையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்றது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விபரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை வழக்கறிஞர் செந்தில்குமரய்யா, 'புதிய சம்பள ஒப்பந்தம் அமல்படுத்துதல், ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்குதல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 14 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவித்து, 'எஸ்மா' (அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு) சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மே 16ல் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி கொண்ட விடுமுறைக்கால அமர்வு உத்தரவு:

ஊழியர்களின் கோரிக்கை யில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி தொகையை 3 மாதங்களில் வழங்க அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். தவறினால் 'எஸ்மா' சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. வழக்கும் முடிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் செக்கானுாரணி ஆர்.மாயாண்டி. இவர், நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயிக்கு தபால் அட்டையில் எழுதிய கடிதம்:
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக கருத்துக்கள் தெரிவித்து
உத்தரவிட்டுள்ளீர்கள். 58 வயதுவரை வெயில், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். எனக்கு தற்போது வயது 82. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் வழங்கப்படாததால், அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். அவர்களின் நியாயமான குறைகளை கனிவுடன் கேட்டு, அரசுக்கு நீதிபதிகள் பலமுறை உத்தரவிட்டும், எங்கள் நலனில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
எங்களுக்கு வரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் 1700 கோடி நிலுவை உள்ளது. எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த 4 ஆயிரத்து 346 கோடி ரூபாயை எல்.ஐ.சி., மற்றும் வங்கிகளில் செலுத்தவில்லை.
ஓய்வூதியம் கிடைக்காமல் பட்டினியில் இருக்கும்போது, அரசிற்கு ஆதரவாக, எங்கள் மீது 'எஸ்மா' சட்டப்படி நடவடிக்கை எடுக்க எப்படி மனம் வந்தது? நாங்களும், குடும்பத்தினரும் ஓய்வூதியம் கிடைக்காமல் சாக வேண்டுமா? தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தில்பாதியைக்கூட கொடுக்க மனமில்லாத கையாளாகாத அரசுக்கு எதிராக, போராட்டம் தவிர வேறு ஏதும் வழி உண்டா? இவ்வாறு மாயாண்டி குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில் உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அலுவலர், 'போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஓய்வுக்கால பலன்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். ஓய்வு பலன்களை வழங்க
நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.

நீதிபதிகள்: மாயாண்டி ஓய்வு பெற்று 24 ஆண்டுகளாகியும், ஓய்வு பலன்கள் கிடைக்காமல் காத்திருப்பதாக தெரிவித்து உள்ளார். அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவிட்டதாக, எங்கள் மீது குறை கூறியுள்ளார். வேறு வழியின்றி போராட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்
களுக்கு பலன்கள் வழங்குவதில் ஏன் இவ்வளவு தாமதம்?அரசு வழக்கறிஞர்: அரசு 1250 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில், ஓய்வு பெற்றவர்
களுக்கு பணிக்கொடை முழுவதுமாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை எல்.ஐ.சி., மற்றும் வங்கிகளில் செலுத்த 140 கோடி, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அக
விலைப்படி வழங்க 79 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு நிலுவைத் தொகையும் மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றார்.
நீதிபதிகள் உத்தரவு: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் இதர முக்கிய விபரங்களை தமிழக தலைமைச் செயலர், போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலர் மே 30 ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். 

இவ்வழக்கில் எல்.பி.எப்.,- சி.ஐ.டி.யூ.,- ஏ.ஐ.டி.யு.சி.,உட்பட 9 தொழிற்சங்கங்களை, நீதிமன்றமே தானாக முன்வந்து எதிர்மனுதாரர்
களாக இணைத்துக்கொள்கிறது. அவர்கள் மற்றும் மத்தி உள்துறை செயலர் மே 30ல் பதில் மனு தாக்கல் செய்ய, நோட்டீஸ் அனுப்பப்
படுகிறது என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024