Saturday, May 27, 2017

துணைவேந்தர் பதவிக்கு கவர்னர் 'இன்டர்வியூ' : இறுதி முடிவு விரைவில் அறிவிப்பு
பதிவு செய்த நாள்27மே2017 01:08

மூன்று பல்கலைகளின் துணைவேந்தர் பதவிக்கு, எட்டு பேராசிரியர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ், முதன்முறையாக நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலையில், இரண்டு ஆண்டு; சென்னை பல்கலையில், ஒன்றரை ஆண்டு; அண்ணா பல்கலையில், ஓராண்டுக்கும் மேலாக, துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டமளிப்பு விழாக்கள் நடத்த வேண்டும் என்பதால், துணைவேந்தருக்கான இறுதி பட்டியலை, உடனே தரும்படி, கவர்னர் உத்தரவிட்டார். மதுரை காமராஜ் பல்கலைக்கு, பேராசிரியர் முருகதாஸ்; சென்னை பல்கலைக்கு, கல்வியாளர் வேதநாராயணன் மற்றும் அண்ணா பல்கலைக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையிலான தேடல் குழுவினர், மே, 20ல், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், பட்டியல் தாக்கல் செய்தனர். அந்த பட்டியலில் உள்ளவர்களிடம், கவர்னர் நேற்று நேர்முகத் தேர்வு நடத்தினார்.

யார், யார் : n சென்னை பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, பல்கலையின், உயிரி - இயற்பியல் பேராசிரியர், வேல்முருகன்; யு.ஜி.சி., துணைத் தலைவர், தேவராஜ் மற்றும் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் தாண்டவன்

n மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் பதிவாளர் செல்லத்துரை; கன்னியாகுமரி நுாருல் இஸ்லாம் பல்கலை துணைவேந்தர், ஆர்.பெருமாள்சாமி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வரலாற்று துறை தலைவர், பேராசிரியர் மரியஜான்

n அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, கோவை அரசு தொழிற்நுட்பக் கல்லுாரி பேராசிரியர், எபனேசர் ஜெயக்குமார்; அண்ணா பல்கலை மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர், கருணாமூர்த்தி ஆகியோர், நேர்காணலில் பங்கேற்றனர். ஐ.ஐ.டி., பேராசிரியர் மோகனும், பட்டியலில் இடம் பெற்றுள்ளார் . இவர்களில், மதுரை காமராஜ் பல்கலைக்கு செல்லத்துரையும், சென்னை பல்கலைக்கு வேல்முருகனும், தேர்வு பட்டியலில் உள்ளதாக தெரிகிறது. அண்ணா பல்கலைக்கு மட்டும், நீதிமன்றத்தில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெற்றபின், அரசாணை வெளியிடப்படும். மேலும், அண்ணா பல்கலை தேடல் குழுவை கலைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிராவில், பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். அதன்படி, சமீபத்தில், தமிழ்நாடு மீன்வள பல்கலை துணைவேந்தரை, நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்தார். அதை தொடர்ந்து, மூன்று பல்கலை துணைவேந்தர் பதவிக்கும், நேர்காணல் நடத்தி உள்ளார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024