Wednesday, May 31, 2017

மறு கவுன்சிலிங்: கவர்னர் அதிரடி

பதிவு செய்த நாள்30மே2017 23:58

புதுச்சேரி, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ இடங்களை, அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளே நிரப்பிக்கொள்வது வழக்கம்.
இந்தாண்டு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இடங்களை, மாநில அரசு நிரப்ப வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.

இதன்படி, புதுச்சேரியில், கல்லுாரி சேர்க்கைக்கான, 'சென்டாக்' அமைப்பு மூலம், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் பல் மருத்துவப் படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அரசு மருத்துவக் கல்லுாரியில், மூன்று; ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 159 என, மொத்தம், 162 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 88 இடங்களே நிரம்பின.

மீதமிருந்த, 71 இடங்களை, பிற மாநில மாணவர்கள் பங்கேற்கும் வகையில், நிர்வாக ஒதுக்கீடாக மாற்றி, சுகாதாரத் துறை செயலர் உத்தரவிட்டார். இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர், கவர்னர் கிரண் பேடியை சந்தித்து முறையிட்டனர்.

நேற்று காலை, இதுபற்றி, கவர்னர் கிரண்பேடி விசாரித்தார். சுகாதாரத் துறை செயலர் உத்தரவுபடியே, மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 'இது முற்றிலும் தவறு. இந்த உத்தரவை ரத்து செய்கிறேன்; 71 இடங்களுக்கு, உடனே மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டார்.
'மெரிட் லிஸ்ட் தயாரித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டி உள்ளதால், நாளை, கவுன்சிலிங் நடத்தலாம்' என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை, கவர்னர் கிரண் பேடி ஏற்று, 'கவுன்சிலிங்கில் நானும் கலந்து கொள்வேன்' என்றார்.இதன்படி, 71 மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கு இறுதி கவுன்சிலிங் நடக்கிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024