Friday, May 5, 2017

பிளஸ் 2 முடித்தவர் சிகிச்சையால் 'பூட்டு' - கட்டட சாவியை யாரிடம் ஒப்படைப்பது : உயர்நீதிமன்றம் உத்தரவு

  பதிவு செய்த நாள் 05 மே 2017  01:37

மதுரை: பரமக்குடியில் பிளஸ் 2 முடித்தவர் சிகிச்சை அளித்ததால், மருத்துவமனைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதை அகற்ற உத்தரவிடக்கோரி டாக்டர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாவியை இடத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

பரமக்குடி சந்தைப்பேட்டை பகவத்சிங் ரோடு பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனையில், ராமநாதபுரம் ஊரக சுகாதார சேவை மற்றும் குடும்பநலத்துறை இணை இயக்குனர், பரமக்குடி தாசில்தார் சோதனை நடத்தி, 'சீல்' வைத்தனர்.

டாக்டர் நியூட்டன் குமார் மித்ரா,'அதிகாரிகளின் இடையூறு இன்றி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். மருத்துவமனை 'சீல்' அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர்,“மனுதாரர் தகுதி பெற்ற ஆயுர்வேத டாக்டர். ஆயுர்வேத சிகிச்சை மட்டுமே அளித்துள்ளார். அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. அதிகாரிகள் சட்டவிரோதமாக மருத்துவமனைக்கு 'சீல்' வைத்துள்ளனர்,” என்றார்.

அரசுத் தரப்பில், 'போலி டாக்டர்களை கண்டறிய ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 2016 செப்.,2 ல் பரமக்குடி பகவத்சிங் ரோடு 'ராய் கிளினிக்'கில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சுப்ரதோ குமார் ராய் என்பவர் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கிக் கொண்டிருந்தார். அவர் பிளஸ் 2 மட்டுமே படித்தவர். மருத்துவப் படிப்பு படிக்கவில்லை. சுப்ரதோ குமார் ராயை போலீசிடம் ஒப்படைத்தோம்,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி: மனுதாரர் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மனுதாரர், கிளினிக் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் இல்லை. இட உரிமையாளர் ரவிச்சந்திரன். அவரிடம் ஆவணங்களை சரிபார்த்து, சாவியை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.3

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...