Wednesday, July 5, 2017

அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு தொடக்கம்

அகில இந்திய ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்வது தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப் பெற்றவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதற்கான முடிவுகள் ஜூலை 15 - ம் தேதி வெளியிடப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் ஜூலை 16-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறு கிறது. இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8 -ம் தேதி வெளியிடப் படுகிறது. இரண்டாம் கட்ட கலந் தாய்வில் இடம் கிடைத்தவர்கள் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் மீதமுள்ள இடங்கள் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு, அந்தந்த மாநில அரசுகளின் ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. வரும் 11-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024