Wednesday, July 26, 2017

கவிதை திருட்டு வழக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
00:00


மதுரை: கவிதை திருட்டு வழக்கில், கல்லுாரி மாணவர் வருத்தம் தெரிவித்து, கவிதையை உண்மையில் இயற்றிய மற்றொரு கல்லுாரி பேராசிரியருக்கு கடிதம் எழுதி, விழா மலரில் பிரசுரிக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திருவிதாங்கோட்டில் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். 1994 ல் கல்லுாரி சார்பில் வெளியான இதழில் 'கூந்தலைத் தட்டி முடி,' தலைப்பில் கவிதை எழுதியிருந்தார்.

மார்த்தாண்டத்திலுள்ள ஒரு கல்லுாரியின் 1996-97 ஆண்டுவிழா மலரில், 'கூந்தலை தட்டி முடி' கவிதை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், மாணவர் எட்வின் ஜிஜி பெயரில் வெளியானது.
மலரின் ஆசிரியராக இருந்த லின்சா
ரத்தினலால், அக்கவிதையை
பிரசுரித்தார்.

செல்வராஜ்,'எனது கவிதை அனுமதியின்றி, மாற்றம் செய்யாமல் அப்படியே எட்வின் ஜிஜி பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியத் திருட்டு நடந்துள்ளது. எனக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்,' என பதிப்புரிமைச் சட்டப்படி
நிவாரணம் கோரி, நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு செய்தார். செல்வராஜிற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து எட்வின் ஜிஜி உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
உத்தரவு:

மிகவும் சிரமப்பட்டு, அழகான மொழி நடையில் செல்வராஜ் கவிதை எழுதியுள்ளார். கவிதை என்பது இலக்கியப் படைப்பு. படைப்பாளிகளுக்கு கவுரவம் அளிக்க வேண்டும். கவிதை திருட்டு நியாயமற்றது.
மனுதாரர் வருத்தம் தெரிவித்து, செல்வராஜிற்கு கடிதம் அனுப்ப வேண்டும். கவிதை பிரசுரமான விழா மலரில், திருத்தம் செய்ய வேண்டும். வருத்தம் தெரிவித்த கடிதத்தை,
அதே விழா மலரில் பேராசிரியர் லின்சா
ரத்தினலால் பிரசுரிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், கீழமை நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும்,
என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024