Monday, November 13, 2017


சென்னையில் ஆட்டோ ஸ்டாண்டுக்குள் புகுந்த சொகுசு கார் : * நட்சத்திர ஓட்டலில் 'வீக் எண்ட்' கும்மாளம் * போதையில் 5 மாணவர்கள் அட்டகாசம் * 5 வாகனங்கள் சேதம்; ஒருவர் பலி

 நவ 13, 2017 02:09

சென்னை : நட்சத்திர ஓட்டலில், 'வீக் எண்ட்' கும்மாளத்தில், அளவுக்கதிகமாய் மது குடித்த, ஐந்து கல்லுாரி மாணவர்கள், போதையில் சொகுசு காரை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்தினர். இதில், ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த, ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன; ஓட்டுனர் ஒருவர் பலியானார்.சென்னை, மயிலாப்பூர் கத்தீட்ரல் சாலையில், அகர்வால் கண் மருத்துவமனை அருகே, ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு நள்ளிரவு நேரங்களிலும், சவாரி வரும் என்பதால், 10க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், இங்கேயே ஆட்டோக்களை நிறுத்திவிட்டு, உள்ளே துாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும், ஐந்து ஓட்டுனர்கள், ஆட்டோவில் உறங்கி கொண்டிருந்தனர். 

இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், மெரினாவிலிருந்து, அண்ணா மேம்பாலம் நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ ஸ்டாண்டிற்குள் புகுந்தது. இதில், ஐந்து ஆட்டோக்கள், சினிமா சண்டைக்காட்சி போல், பறந்து விழுந்து நொறுங்கியது. மேலும், ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுனர்கள், சாலையில் துாக்கி வீசப்பட்டனர். சிலர், வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கினர். அதேசமயம், சொகுசு காரில் உள்ள அவசரகால பாதுகாப்பு பலுான் என்ற, ஏர் பேக் விரிந்ததால், அதில் இருந்த ஐந்து பேர், சிறு காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர், பேசக்கூட முடியாத அளவுக்கு, 'குடி' போதையில் இருந்துள்ளார்.

சம்பவம் அறிந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ராஜேஷ், 35, திருமலை, 38, மோகன், 31, பாபு, 42, பாலன், 50 ஆகிய ஐந்து பேரையும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.போதையில் இருந்த கார் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அண்ணாநகரைச் சேர்ந்த, டீ துாள் வியாபாரி காஷிமுகமது மகன் நவீத் அகமது, 20, எம்.ஆர்.சி.நகரில் உள்ள, லீலா பேலஸ் என்ற தனியார் நட்சத்திர ஓட்டலில், தன் கல்லுாரி நண்பர்கள் நான்கு பேருடவ், 'வீக் எண்ட்' என்ற, மது விருந்தில் பங்கேற்றார்.

போதையில் தடுமாறிய அவர்கள், நுங்கம்பாக்கம் தாஜ் நட்சத்திர ஓட்டலில், மது அருந்தி கொண்டிருந்த மற்றொரு நண்பரை அழைப்பதற்காக, 'செவ்ரோலேட்' என்ற சொகுசு காரில், அதிவேகமாக சென்று விபத்தைஏற்படுத்தி உள்ளார்.ஓட்டுனர் உட்பட அனைவரிடமும், மது பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஓட்டுனர் நவீத் அகமது, 65 சதவீதம் அளவுக்கு மது அருந்தி இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார், ஐந்து கல்லுாரி மாணவர்
களையும் கைதுசெய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் பலி : இந்நிலையில், விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ், அங்கு உயிரிழந்தார்.மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2015ல், இதே ஆட்டோ ஸ்டாண்டிற்குள், நீதிபதியின் மகன் ஒருவர், மது போதையில் சொகுசு கார் ஓட்டிச் சென்று, விபத்து ஏற்படுத்தினார். இதில், 12 ஆட்டோக்கள் நொறுங்கின.

போதை கும்பல் அட்டகாசம் : சென்னையில் தினசரி இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டுபவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், 11:00 மணி வரை மட்டுமே வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். நட்சத்திர ஓட்டலில் மது அருந்தும்
நபர்கள் இரவு 12:00 மணிக்கு மேல் தான் வெளியே வருவர். அளவுக்கதிகமான போதையில் கார் ஓட்டும் அவர்கள் தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர்.






No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...