Wednesday, December 20, 2017

கல்விக்கு கைகொடுக்கும் கணேசன்: இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்

Published : 20 Dec 2017 10:00 IST

எஸ்.கே.ரமேஷ்



உதவிபெற்ற மாணவர்களுடன் கணேசன்



கணேசன்



பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூட நேரம்போக மீதி நேரத்திலும் மாணவர்களுக்கு தனிப்பாடம் எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், பள்ளியில் தனக்கு அளிக்கப்படும் ஊதியத்திலேயே ஒரு பகுதியை, வறுமைக்கு இலக்கானவர்களுக்காக செலவழித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன்.

படித்த பள்ளியிலேயே வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஜே.ஆர்.சி. ஆசிரியர் கணேசன். இங்கேயே படித்து இங்கேயே ஆசிரியராக வந்திருப்பது கணேசனுக்குக் கிடைத்த பெருமை. இயல்பாகவே இரக்க குணம் கொண்ட இவர், தனது வருமானத்தின் ஒரு பகுதியில், பெற்றோரை இழந்ததால் படிப்பை கைவிடும் நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கும் உதவி வருகிறார். அப்படி, கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார் கணேசன்.

“படிக்கிற காலத்தில் என்னோடு படித்த நண்பர்கள் பலர் வறுமையின் காரணத்தால் படிப்பை பாதியிலேயே விட்டனர். நோட்டுப் புத்தகம் வாங்கக்கூட வழியில்லாமல் படிப்பைக் கைவிட்ட மாணவர்கள் உண்டு. தந்தை இறந்ததால் படிப்பை விட்டுவிட்டு குடும்ப பாரம் இழுக்க கூலி வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்க அப்பாவுடன் சேர்ந்து நானும் ஜவுளி வியாபாரத்துக்குப் போவேன். அப்ப, அவரு எனக்கு செலவுக்குக் குடுக்கிற காசுல என் நண்பர்கள் படிப்புக்கு கொஞ்சமா உதவியிருக்கேன்.

அன்றாடங்காய்ச்சிகளாக..

இப்ப நான் அரசு வேலையில இருக்கிறேன். ஆனா, என்கூட படிச்ச நண்பர்களில் பலர் இன்னிக்கும் அன்றாடங்காய்ச்சிகளா இருக்காங்க. சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச வசதி வாய்ப்புகள் அவங்களுக்குக் கிடைச்சிருந்தா அவங்களும் இப்ப நல்ல நிலையில இருந்திருப்பாங்க. இதையெல்லாம் நினைச்சுப் பார்த் துத்தான் இப்ப ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்புக்கு உதவிட்டு வர்றேன். ஆசிரியர் வேலையில் சேர்ந் தப்பவே நான் எடுத்துக்கிட்ட தீர்மானம் இது.

எனது சேவைக்கு எனது குடும்பத்தினரும் சக ஆசிரியர்களும் சேவையுள்ளம் கொண்ட நல்ல மனிதர்களும் துணை நிக்கிறாங்க. அவங்க சப்போர்ட்டுல இப்ப மாற்றுத்திறனாளி பிள்ளைகள் 43 பேரை தத்தெடுத்து படிப்பு உள்பட அவங்களுக்கான அனைத்து உதவிகளையும் செஞ்சுட்டு வர்றேன்” என்கிறார் கணேசன்.

அவராலதான் படிக்கிறாங்க

இவரது உதவியால் தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் ரோஜா என்ற பெண்மணி, “ஆட்டோ ஓட்டிட்டு இருந்த எங்க வீட்டுக்காரரு நாலு வருசத்துக்கு முந்தி திடீர்னு இறந்துட்டாரு. அதனால, வருமானத்துக்கு வழியில்லாம போயி, என்னோட முத்த பொண்ணு காலேஜ் படிப்பையே பாதியில விடுற மாதிரியான சூழல் ஏற்பட்டுப் போச்சு. அந்த சமயத்துல, கணேசன் சார் எனக்கு தையல் மிஷின் வாங்கித் தந்து வருமானத்துக்கு வழி சொன்னாரு. அவரோட உதவியாலதான் என்னோட பிள்ளைங்க அத்தனை பேருமே இப்ப காலேஜ் படிச்சுட்டு இருக்காங்க” என்றார்.

ஏழைகளின் கல்விக்காக மட்டுமே உதவி வந்த கணேசன், இப்போது வரியவர்களின் பசிபோக்கும் காரியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளைக் கேட்டுப் பெற்று அவற்றை பசியால் வாடும் குடும்பங்களுக்குக் கொண்டுபோய் சேர்த்து வரும் இவர், ஓய்வு நேரங்களில் வீடு வீடாகச் சென்று, பழைய ஆடைகளை கேட்டு வாங்கி தேவையானவர்களுக்கு அவற்றை வழங்கி வருகிறார்.

“பசியால் யாரும் இறக்கக்கூடாது. பணமில்லை என்பதற்காக யாரும் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது. எப்போதும் இந்த லட்சியத்தை நோக்கியே எனது பயணம் இருக்கும்” - இது பேட்டியை முடிக்கும் போது கணேசன் ‘நச்’ என்று சொன்ன நல்ல வார்த்தைகள்!

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...