Wednesday, June 20, 2018

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி., கட்டாயம் : யு.ஜி.சி., முடிவிற்கு வரவேற்பு

Added : ஜூன் 20, 2018 05:46

மதுரை: உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்லுாரி மற்றும் பல்கலை உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் (பிஎச்.டி.,) பட்டம் கட்டாயம் என பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டது

 கல்வியாளர், பேராசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கான தலையெழுத்தை நிர்ணயிப்பதில் உயர்கல்விக்கு முக்கிய பங்குண்டு. பல சவாலான சமூக, பொருளாதார பிரச்னைகளுக்கு ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வு சொல்லும் களங்களாக பல்கலைகள், கல்லுாரிகள் உள்ளன.ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கல்வி 'கடைச்சரக்கு' போல் ஆகி விட்டது. பல்கலையை நிர்வகிக்கும் கண்ணியமிக்க துணைவேந்தர் பணியிடங்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்படுகின்றன.அதேநேரத்தில் உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் யு.ஜி.சி., மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆசிரியர்களின் கல்வித் திறனை அளவிட புதிய வழிமுறைகளையும் யு.ஜி.சி., வகுத்துள்ளது. இதில் முக்கியமானது,'ஆராய்ச்சிப் பணி, கல்வி சார்ந்த இதழ்கள் வெளியிடுவதை மட்டும் ஆசிரியர்களின் நீண்டகால அனுபவத்திற்கு அளவுகோலாக எடுத்துக்கொள்ள கூடாது. தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.கல்லுாரி, பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெறுவது கட்டாயம்' என மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார். யு.ஜி.சி.யின் இந்த விதிமுறை 2021ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:தரம் மேம்படும் முனைவர் முத்துராஜா, பேராசிரியர், அமெரிக்கன் கல்லுாரி, மதுரை: கல்லுாரி உதவி பேராசிரியர்கள் இதுபோன்ற உயர் தகுதிகள் பெற்றிருந்தால் தான் மாணவர்களை அதற்கான தரத்திற்கு ஏற்ப உருவாக்க முடியும். உலகளாவிய கல்வி முறைகளை மாணவர்கள் அறிய செய்ய முடியும். உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர் என்ற எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. யு.ஜி.சி.,யின் இதுபோன்ற உத்தரவு உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தையும் மேம்படுத்த அடிப்படையாக அமையும். தரமான கல்விக்கு இதுபோன்ற விதிமுறைகள் அவசியம்.கற்பித்தல் சாத்தியமாகும்

முனைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர், மதுரை காமராஜ் பல்கலை: முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பிப்போரில் 20 சதவீதம் உரிய காலத்தில் முடிக்கின்றனர். 'நெட்', 'செட்' தகுதி தேர்வுகள் எழுதுபவர்களை விட பிஎச்.டி., படித்தவர்களிடம் ஆழமான கற்றல் கற்பித்தல் திறன் இருக்கும். ஆய்வு அணுகு முறைகள் மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்த தெளிவு பெற்றிருப்பர். சர்வதேச இதழ்களில் கட்டுரைகள் பிரசுரிக்க வேண்டும் என்பதால் அதற்கான தரம் முனைவர் பட்டம் முடிப்போரிடம் இருக்கும். இவையெல்லாம் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க பயன்படும்.
முனைவர் பட்டம் கட்டாயப்படுத்தப்படுகிறது என்றாலே 'நெட்', 'செட்' தகுதியில் திருப்தியில்லை என்பது தான் அர்த்தம்.தகுதியானவர் கிடைப்பர்
முனைவர் ராம் திவாகர், மதுரை:முனைவர் பட்டம் பெறுவோரின் கற்பிக்கும் முறையில் மாற்றம் தெரியும். பாடத்திட்டங்களை 'அப்ளிகேஷன் ஓரியன்டடு' முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பிற்கு நுழைவு தேர்வு உள்ளது. இதன் மூலம் தகுதியானவர்கள் முனைவராக முடியும். பல நாடுகளை சேர்ந்த பல்கலைகள் தொடர்பு கிடைக்கும். இதழ்கள் வெளியீடுகளை படிக்கும் அனுபவத்தால் கற்பித்தல் திறனில் மாற்றம் கொண்டு வரலாம். இது ஆய்வுக்கான களமாகவும் அமையும்.

கற்பிக்கும் முறையில் மாற்றம் : அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர்: இந்த முடிவு வரவேற்கத்தக்கது தான். அதேநேரம் பிஎச்.டி., வழிகாட்டிகளின் தரமும் அவசியம். அனைத்து வசதியுடன் கூடிய ஆய்வுக் கூடங்கள் இங்கு குறைவு. சிலர் ஏனோ தானோ என முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர். சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளை சரியான ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் முனைவர் பட்டம் பெற்று உதவி பேராசிரியராக பணியில் சேருவோரின் கற்பித்தல் திறன் தரமானதாக இருக்கும். அதேநேரம் உயர்கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்குவிப்பதற்கு ஏற்ப பாடத் திட்டங்களையும் மாற்ற வேண்டும்

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...