Monday, October 1, 2018

மாநில செய்திகள்

கணவன் மட்டுமே மனைவியின் வாரிசு: சான்றிதழ் அளித்த தாசில்தாரும், தீர்ப்பு அளித்த நீதிபதியும் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு




கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:10 AM

சென்னை,

விபத்தில் பலியான பெண்ணுக்கு கணவன் மட்டுமே வாரிசு என்று சான்றிதழ் கொடுத்த நாமக்கல் தாசில்தாரும், அதனடிப்படையில் கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கணவனுக்கு இழப்பீடு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பரிமளா என்ற பாப்பாத்தி. இவர் வாகன விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது கணவர் முருகேசன், பெற்றோர் சின்னம்மாள், நடேசன் ஆகியோர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மோட்டார் வாகன விபத்துக்களை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி வி.சம்பத்குமார் விசாரித்து, கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி 4–ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

அந்த தீர்ப்பில், ‘இறந்துபோன பரிமளா திருமணம் ஆனவர். அவரை நம்பி அவரது பெற்றோரும், கணவரும் உள்ளனர். இருந்தாலும், நாமக்கல் தாசில்தார் கொடுத்துள்ள வாரிசு சான்றிதழில், கணவர் முருகேசன் மட்டுமே வாரிசு என்று கூறப்பட்டுள்ளது. அதனால், விபத்துக்குள்ளான வாகனம் காப்பீடு செய்திருந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், முருகேசனுக்கு ரூ.13 லட்சத்து 71 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.கடும் கண்டனம்

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இன்சூரன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். அப்போது நாமக்கல் (தாலுகா) தாசில்தாருக்கும், தீர்ப்பு வழங்கிய கீழ்கோர்ட்டு நீதிபதி சம்பத்குமாருக்கும், நீதிபதி எம்.வி.முரளிதரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான ஒருவர் இறந்து விட்டால், அவரது வாழ்க்கை துணையும், குழந்தைகளும் முதல்நிலை வாரிசுகள் ஆவர், அவரது பெற்றோர் உயிரோடு இருந்தால், அவர்கள் 2–ம் நிலை வாரிசு ஆவர். வாரிசு சான்றிதழ் கொடுக்கும்போது, இவர்கள் அனைவரையும் வாரிசுகளாக தாசில்தார் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.ஒரே வாரிசு

ஆனால், இந்த வழக்கில், கணவன் மட்டுமே வாரிசு என்று நாமக்கல் தாசில்தார் சான்றிதழ் கொடுத்துள்ளார். இதை கீழ்கோர்ட்டும் ஏற்றுக்கொண்டு, கணவனுக்கு மட்டுமே மொத்த இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது.

தாசில்தார் இந்த வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு முன்பு, முறையான விசாரணை எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. அதேபோல, நீதிபதி சம்பத்குமாரும், இந்த சான்றிதழை முழுமையாக பரிசீலிக்காமல், அதன் அடிப்படையில், முழு இழப்பீடு தொகையை கணவனுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.விளக்கம் வேண்டும்

எனவே, இந்த வழக்கில் நாமக்கல் தாசில்தாரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவர் வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எவ்வாறு இந்த வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது? என்பதை விளக்கி கூற வேண்டும்.

அதேபோல, நீதிபதி வி.சம்பத்குமாரும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எந்த அடிப்படையில் கணவனுக்கு மட்டும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024