Saturday, May 9, 2015

நீதி மன்றத் தீர்ப்பும்... நிம்மதி இழந்திருக்கும் தமிழனும்!

cinema.vikatan.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வருகின்ற 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பலரும் வீட்டுச் சிறையில் முடங்க வேண்டுமா எனப் புலம்பும் நிலையில் இருக்கிறர்கள்.
நீதிமன்றத் தீர்ப்பு என்றால் பிரச்னைக்கு முடிவு என்ற அர்த்தம் மாறி, தீர்ப்பு எதிர்மறையாக இருந்தால் தமிழனை முடங்க வைக்க வேண்டும், தீராத சோகமாக வன்முறை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எடுத்துக் காட்டாக   உள்ளது.

வன்முறையால் அரசுப் பேருந்தை எரிப்பதும், பொதுமக்களை கஷ்டப்படுதுவதும் யாருக்கு கொடுக்கும் தண்டனை இது? அதிக அளவு வாக்கு சதவீதம் கொண்ட பெரும்பான்மை உள்ள  கட்சி, தனக்காக ஓட்டு போட்ட மக்களையே கஷ்டப்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? நடுநிலையாக உள்ள பொதுமக்கள், தீர்ப்பு பாதகமாக வர வேண்டும் எனச் சொல்லாத நிலையில், அவர்களை கஷ்டப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பல்வேறு கட்சிகள் பல ஊழல் வழக்குகளில் சிக்கி இருக்கும் நிலையில், தீர்ப்புகள் வரும் போதெல்லாம் வன்முறை என்றால் ஆண்டு முழுவதும் வன்முறை மிகுந்த ஆண்டாகத்தான் இருக்கும். ஊழல் வழக்குகள் இல்லாத கட்சிகளை விரல் விட்டு என்னும் நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கினாலும், விடுதலை தீர்ப்பு வந்தாலும் பொதுமக்களுக்கு ஒன்றுதான். யாரையும் கஷ்டப்படுத்தி சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு பொதுமக்களுக்கு கிடையாது. எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் தெய்வம் சும்மா விடாது என்ற எண்ணம் மட்டுமே கொண்டவர்கள் பொதுமக்கள். அன்றாடம் கஷ்டப்படும் மக்களுக்கு யார் ஆட்சி செய்தாலும் ஒன்றுதான். ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிப்பதாலோ, விடுதலை அளிப்பதாலோ ஏழைகளின் வாழ்வில் மாற்றம் வரப்போகிறதா? எந்த அரசியல்வாதிகளையும் சிறையில் தள்ளி பழி வாங்கும் எண்ணம் தமிழனுக்கு கிடையாது.

அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் அறிக்கை போரால் வெட்டிச் சாய்த்துக் கொள்வதால், அப்பாவி தமிழனுக்கே நஷ்டம். எந்த முன்னேற்றமும் இல்லாமல், மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழகம் பின்னோக்கிச் செல்லும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள ஒரே திறமை ஊழல் செய்வதுதான் என்பது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் நன்றாக தெரியும். இந்தியாவில் கொசுக்களைவிட வேகமாக வளர்ந்து நம்மை கொல்வது லஞ்சமும், ஊழலும்தான். மக்கள் தொகையைவிட ஊழல் வழக்குகள் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மக்களுக்காக தெருவில் இறங்கி போராட வேண்டிய அமைச்சர் பெருமக்கள், கோவில் கோவிலாகச் சென்று நீதிபதியின் தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்று வேண்டி பல்வேறு வகையில், கடவுளே கோவிலைவிட்டு வெளியேறி ஓடும் அளவிற்கு “கடவுளை கஷ்டப்படுத்தும்” பெருமை நம் அமைச்சர்களையே சேரும். அமைச்சர் பெருமக்கள் இனி நீதிமன்றம் நோக்கி படை எடுப்பார்கள். ஏதோ இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்ற பயத்தில் நீதிபதி தீர்ப்பை மாற்றிச் சொல்லுவார் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களா? இல்லை, ஏற்கனவே முடங்கியுள்ள தமிழக அரசு திட்டங்கள் மேலும் முடங்கட்டும் என்ற  நல்எண்ணத்தில் செல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வழக்கம் போல காவல் துறை எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் வன்முறையை பாதுகாக்கும் துறையாக மாறி மக்களின் சாபத்திற்கு ஆளாகுமா என்பது தெரியவில்லை. சென்ற முறை நடந்த வன்முறை போல இம்முறையும் வன்முறை நிகழ்ந்தால் அது அ.தி.மு.க.வுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் உருட்டு கட்டை தூக்கும் கும்பலை காவல் துறை வேடிக்கை பார்க்காமல், தங்களுக்காக போராடிய கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை எப்படி ஊருக்கு ஒதுக்குபுறமாக, சுடுகாட்டில் கொண்டு இறக்கி விட்டார்களோ அதே வீரத்தை இம்முறை அரசியல் கட்சிகளிடம் காவல் துறை காண்பிக்க வேண்டும்.
வன்முறையில் இறங்கி கட்சியில் பெரிய ஆளாக மாறிவிடலாம் என தவறான எண்ணத்தில் மக்களை கஷ்டப்படுத்தினால், இன்று உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறை நாளை ஆட்சி மாறியதும் வீடு தேடி வந்து உங்களை அழைத்துச் சென்று சிறையில் அடைக்கும். கட்சிப் பதவியைவிட குடும்பமே முக்கியம். வன்முறையால் நிம்மதியும், குடும்ப உறவு முறைகளும் அழியும். வன்முறையால் ஒருவரை அழித்து ஒருவர் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

ஊழல் குற்றசாட்டில் சிக்கிய முன்னாள் முதல்வருக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அறிக்கைப் போர் நடத்துவது, ஏதோ தங்கள் கட்சி நேர்மையான, ஒழுக்கமான, லஞ்சம், சொத்து குவிக்காத கட்சி என்பது போலவும், நாங்கள்தான் உத்தமர்கள் என சொல்வது போல் நடப்பதும், மக்களிடம் வெறுப்பையே உண்டாக்கி வருகிறது. நேற்று ஆரம்பித்த கட்சிக்கு கூட கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்த உண்மை. நீதி வென்றது எனச் சொல்லும் அரசியல் கட்சிகள், நேர்மையாக சொத்துக் கணக்கை கொடுக்க முடியுமா? நீதியும், நேர்மையும் கட்சிகளில் இருந்தால் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை?

நாளை மே 10 ''அன்னையர் தினம்" அம்மா என்று அன்போடு அழைத்த தமிழர்களுக்கு அம்மா அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டியது ஒன்றுதான்... மீண்டும் ஒருமுறை கட்சியினரிடமும், பொது மக்களிடமும் கட்சியினரின் மனநிலையை சமன் படுத்தவும், தீர்ப்பு சாதகமாகவோ, பாதகமாகவோ வந்தால் கட்சியினர் அனைவரும் அமைதி காக்க வலியுறுத்த வேண்டும். பாதகமான தீர்ப்பு என்றால் பேருந்தை எரிக்கவும், கடையை அடைக்கவும், மறியல் செய்து வீட்டில் அனைவரையும் முடக்கவும் கட்சியினர் முயற்சித்தால் அது கட்சியை மட்டுமல்ல உங்களது மீதான அன்பையும், மதிப்பையும் அழித்துவிடும். அம்மா என்றால் அன்புதான் நினைவுக்கு வர வேண்டுமே தவிர கட்சியினரின் தற்கொலைகள், அராஜக வன்முறை நினைவுக்கு வரக்கூடாது.

நீதிமன்றத்தின் தீர்ப்பைவிட மக்களின் தீர்ப்புதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற உண்மையை புரிந்து கொண்டு, "அம்மா" என்று அன்போடு அழைக்க வைப்பார்களா? அல்லது “ஐயோ! அம்மா வன்முறையில் இருந்து காப்பாற்றுங்க” என கதறி அழ விடுவார்களா?

எதுவாக இருந்தாலும் எந்த ஒரு  செயலுக்கும் எதிர்வினை உண்டு. இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள் என்பது காலம் காலமாய் அரசியல்வாதிகள் படித்து வரும் பாடம்!

எஸ்.அசோக்

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024