Saturday, May 23, 2015

செம்மரங்கள் சிந்தும் கண்ணீர்

நம் தேசத்தில் மண்ணோடும், மனிதர்களோடும் வேரூன்றி நிற்பன மரங்கள். ஒரு வீடு மணக்கோலம் கொண்டிருப்பதை, வாசலிலே கட்டியிருக்கும் வாழை மரம் உணர்த்துகிறது. மற்றொரு வீடு பிணக் கோலம் கொண்டிருப்பதை மூங்கில் மரம் சுட்டுகிறது. 

பிறந்த குழந்தையை மரத் தொட்டில் தாலாட்டுகிறது. மணந்த தம்பதியரை மரக் கட்டில் தாங்குகிறது. வாழ்ந்து முடிந்தவர்களைக் கால்கழிக்கட்டில் (பாடை) ஏந்துகிறது. எனவே, மனிதனுக்கு மரம் இயற்கை கொடுத்த வரம் எனலாம். அந்த வரத்தை வெட்டுபவனுக்கு அதுவே சாபமும் ஆகிறது.
இலக்கணத்தால் மட்டுமே மனிதன் உயர்திணை ஆகின்றான். மரம் அஃறிணை ஆகின்றது. மற்றபடி பயன்பாட்டால், உணர்வுகளால், மரமும் உயர்திணையே. இறைவனைப் போலவே மரமும் தன்னடியை அடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருகிறது. சில சமயங்களில் புத்தனாகவும் ஆக்குகிறது. மனிதன் இறந்தால் பணம் கொடுத்துத் தூக்க வேண்டியிருக்கிறது. மரம் இறந்தால், பணம் கொடுத்துத் தூக்கிக் கொண்டு போகின்றனர்.
தாகத்தோடு வருகின்றவர்களுக்கு தென்னை மரம் இளநீர் தருகிறது. அதனால்தான் வள்ளலார், "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைக் கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே' என மரத்தை இறைவனாக உருவகித்துப் பாடுகிறார்.

வேட்ஸ்வொர்த் எனும் ஆங்கிலக் கவிஞன், பள்ளத்தாக்கிலுள்ள மரங்களையும், மரங்களிலுள்ள மலர்களையும் பார்க்கிறான். பார்த்துப் பரவசப்பட்ட அவன், ஒரு தாய் மடியை நோக்கி, ஒரு குழந்தை தாவுவதுபோல், என் இதயம் மரங்களின் உச்சிக்கே தாவிவிட்டன. அந்தத் தாய் பேசுவது எனக்குக் கேட்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் எனப் பாடுகிறான்.

மரங்கள் தம்முடைய ஒவ்வொரு பாகத்தாலும் நம்முடைய நோய்களைத் தீர்ப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்பதைத் திருவள்ளுவர், "மருந்தாகித் தப்பா மரத்து அற்றால்' எனும் குறட்பா மூலம் புலப்படுத்துகிறார்.
மரங்களும், மலர்களும் உயர்ந்த நோக்கத்துக்காகத் தங்கள் உயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராய் இருக்கின்றன என்பதை மாக்கன்லால் சதுர்வேதி எனும் ஒரு ஹிந்திக் கவிஞன் புஷ்பிக் அபிலாஷா எனும் தலைப்பில் (மலர்களின் ஆசை) ஒரு தோட்டக்காரனோடு மலர்ந்த மலர்கள் பேசுவதாக ஒரு கவிதை தீட்டியுள்ளார்.

பல நாள்கள் நீரூட்டி வளர்க்கப்பட்ட செடிகள் பூத்தவுடன், அந்த மலர்களைப் பார்த்துத் தோட்டக்காரன், "உங்களைப் பறித்து நான் எங்கே கொண்டு அர்ப்பணிக்க' என்று கேட்கின்றான். 

அதற்கு மலர்க் கூட்டத்தின் தலைமை மலர், "ஏ! தோட்டக்காரனே, நாங்கள் தேவ கன்னியர்கள். காதலியைத் தன்வசப்படுத்துவதற்காக மார்பிலே மாலையை அணிந்து செல்லும் காதலனின் மாலைக்கு மலராகப் போக விரும்பவில்லை. தேவர்களின் தலைமுடிமேல் அமர்ந்திருக்கவும் விரும்பவில்லை. அரியணை ஏறும் அரசர்களின் கழுத்துக்கும் மாலையாக விரும்பவில்லை. மகா சக்கரவர்த்திகள் மாண்டுபோனபோது அவர்கள் மார்புக்குச் சூட்டும் மாலைக்கும் மலராக விரும்பவில்லை.
வேறு எதற்கு நாங்கள் பயன்பட வேண்டும் தெரியுமா? அடிமைப்பட்ட நாட்டின் சுதந்திரத்தை மீட்கத் தங்கள் தலையையும் தரத் தயாராக இருக்கும் வீரர்கள் நடந்து போகின்ற பாதைகளில் கொண்டுபோய் எங்களை விசிறி எறி, அவர்களின் காலுக்குக் கீழே நாங்கள் தேய்ந்து வீர மரணம் அடைய வேண்டும்' எனப் பிரகடனம் செய்ததாம்.

அப்படி வீர வரலாறு படைக்க இருக்கும் தாவரங்களை வயிற்றுப் பிழைப்புக்காகவும், மாஃபியா சுகத்துக்காகவும் வேர் பறிக்கலாமா?
அப்படிப் பெருவேட்கை கொண்டிருக்கும் தாவரங்கள் இன்றைக்கு எதற்காக வதைக்கப்படுகின்றன தெரியுமா? பாலுணர்வைத் துரிதப்படுத்தித் தூண்டுவதற்கான போதை மருந்தைத் தயாரிப்பதற்குச் செம்மரங்கள் வெட்டிக் கடத்தப் படுகின்றன. 

ஜப்பானில் மிக அபூர்வமான இசைக் கருவியின் பெயர் ஸôமிஷென் என்பதாகும். அந்த இசைக் கருவியைத் தயாரிப்பதற்குச் செம்மரத்தைப் போலப் பயன்படுவது வேறொன்றுமில்லையாம்.
ஐரோப்பிய நாடுகளில் வெகு அபூர்வமான வியாதிகளைத் தீர்ப்பதற்குரிய மருந்து வகைகள் நம்முடைய செம்மரத்திலிருந்துதான் தயாரிக்கிறார்களாம். இந்தக் காரணத்துக்காக செம்மரங்கள் வெட்டப்படுமானால், அவை ஆனந்தக் கண்ணீர் அல்லவா வடிக்கும்?மரங்களுக்கு நம்மைப் போல ம
னமும், மனசாட்சியும் உண்டு. மேலும், சத்தியத்துக்குச் சாட்சியாகவும் மரங்கள் இருந்திருக்கின்றன. சங்க காலத்தில் தலைவன், தலைவியோடு நெருங்கிப் பழகிவிட்டு, மணம் பேசுங்காலை, அவளை எனக்குத் தெரியவே தெரியாது எனக் கைவிடுவானேயானால், அவனைக் கொண்டுபோய் ஒரு மரத்தடிக்குக் கீழே நிறுத்தி, முன்சொன்னதையே சொல்லச் சொல்வார்களாம்.
அப்படி அவன் நயவஞ்சகமாகப் பொய் சொல்லுவானேயானால், அம்மரம் கரிந்து பட்டுப்போய் அவனைக் காட்டிக் கொடுத்துவிடுமாம் (கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின் வாடி என்பது பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடல் எண் 33, கலித்தொகை). மனிதர்களைக்கூட ஏமாற்ற முடிந்த சங்க காலத்தில், மரத்தை ஏமாற்ற முடியவில்லை.
கண்ணனுடைய புல்லாங்குழல் இசையைக் கேட்டு மரங்கள் மயங்கியதை தனது 284-ஆவது பாசுரத்தில் பெரியாழ்வார் அதிஅற்புதமாக எடுத்துரைக்கிறார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைமுரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் இசைக் கல்லூரிப் பேராசிரியராக இருந்தபோது, இசைக் கல்லூரியைச் சுற்றியிருந்த மரங்கள் வெகு வேகமாக (மற்ற இடங்களில் இருக்கும் மரங்களைக் காட்டிலும்) வளர்ந்ததாகத் தாவரவியல் பேராசிரியர்கள் கண்டறிந்தார்கள்.

மரங்கள் நம் வாழ்வோடு இணைந்தவை. தொன்றுதொட்டு நம்முடைய இல்லத் திருமணங்களில், மூன்று நாள்களுக்கு முன்பாகப் பந்தக்கால் (அரசாணிக்கால்) நடுவார்கள். அப்படி நிறுத்தப்பட்ட மரங்களைத் திருமணம் முடிந்த அன்று மாலை, பெண்ணும், மாப்பிள்ளையும் அந்த அரசாணிக்காலைக் கொண்டுபோய், மாப்பிள்ளை வீட்டாரின் கொல்லைப்புறத்தில் நடுவார்கள். அந்த மரத்தின் வளர்ச்சியைப் போல, அவர்கள் வாழ்க்கை தழைக்கும் என்பது நம்பிக்கை.

திருக்கோயிலுக்குச் சென்று மூலவரை வணங்குவதற்கு முன்பு தலவிருட்சத்தை வணங்கிவிட்டுத்தான் பிற வழிபாடுகள். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தல விருட்சம் உண்டு. மரங்களையே தெய்வமாக வணங்குகின்ற பாரம்பரியம் நமக்குண்டு. ராமா என்ற சொல்லை உச்சரிக்கத் தெரியாத வேடன் வான்மீகி, மராமரத்தின் பெயரை உச்சரித்து அல்லவா முனி
வரானார்.

இன்றைக்குத் திருப்பதியில் இருக்கின்ற சேஷாசலத்தில்தான் செம்மரங்களும், மலை மனிதர்களும் வெட்டப்படுகிறார்கள். ஆனால், அந்தத் திருவேங்கடத்தில்தான் குலசேகர ஆழ்வார், அடுத்த பிறவியில் செண்பக மரங்களாய் பிறக்க வேண்டுமென்று வேங்கடவனை வேண்டுகிறார்.
மரங்கள் ஞானத்தைப் போதிக்கும் மனிதர்களாக நமக்குப் பயன்பட்டு வருகின்றன. அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்ரா பெüத்த மதத்தைப் பரப்புவதற்கு இலங்கைக்குச் சென்றபோது, போதி மரத்தின் ஒரு கிளையை இங்கிருந்து வெட்டிக் கொண்டுபோய் அங்கு நட்டிருக்கிறார். "பண்ணிய புண்ணியம் பயிரில் தெரியும்' எனும் ஒளவைப் பாட்டியின் அறிவுரையை அனுசரித்தே நம்மவர் வாழ்ந்திருக்கின்றனர்.

வாழ்க்கையைச் சித்திரிப்பதற்குச் சங்கப் புலவர்களுக்கு மரங்கள்தாம் கைக்கொடுத்திருக்கின்றன. பாலை பாடிய பெருங்கடுங்கோ பாலைக்கலி 9-ஆம் பாட்டில் (கலித்தொகை) யதார்த்த வாழ்க்கையைத் திட்பமாகவும், நுட்பமாகவும் தீட்டிக் காட்டுகிறார். 

பாலைவனத்தில் ஒரு மரம் பட்டுப்போய் நிற்கிறது. அது எவ்வாறு பட்டுப்போயிருக்கிறது என்றால், இளமைக் காலத்தில் ஒருவனுக்கு வறுமை வந்தால் எப்படித் தரித்திரப்பட்டு நிற்பானோ அப்படிப் பட்டுப்போயிருக்கிறது என்றார். 

அந்த மரம் ஓலைகள் இன்றி நிற்பது எப்படியிருக்கிறது என்றால், கயவனிடம் செல்வம் சேர்ந்தால், அவன் தன்னிடம் யாரையும் நெருங்கவிடாமல் இருப்பதுபோல் நின்றதாம். மேலும், அம்மரம் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுக் கருகி நிற்பது எவ்வாறு இருக்கிறதென்றால், அதிகாரத்தின் உச்சிக்குப் போய் எல்லோரையும் கொடுமைப்படுத்திக் கெட்ட பெயர் தேடிக்கொண்ட ஆட்சியாளனைப் போல் நின்றதாம். 

வாழ்க்கையைச் சித்திரிப்பதற்குக் கைக்கொடுத்த மரங்களின் கைகளையும், கால்களையும் வெட்டலாமா?
வாழ்க்கையைக் கற்பிக்கும் மரங்களை வெட்டுபவர்களுக்குப் புத்தி புகட்ட விந்தன் ஓர் உருவகக் கதை சொன்னார். ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஒருவன் கோடரியை ஓங்குகிறான். 


அப்படி ஓங்குபவனை விட்டுவிட்டுக் கோடரியைப் பார்த்து மரம் பேசுகிறது, "ஏ கோடரியே, உன்னை ஏந்தி நிற்கும் மனிதனுக்குத்தான் நன்றியில்லை. இந்த மரம்வெட்டி சென்ற மாதம்தானே என்னிலிருந்து ஒரு கிளையை வெட்டிப்போய், இப்போது கோடரிக் காம்பாக உன்னைப் போட்டிருக்கிறான். என்னிலிருந்து போன உனக்குமா நன்றியில்லாமல் போயிற்று? தாயின் வயிற்றையே கிழிக்கலாமா' என மரம் கேட்டது
.
அதற்குக் கோடரிக் காம்பு, "தாயே நான் உன் வயிற்றில் இருக்கும்வரை நன்றியோடுதான் இருந்தேன். ஆனால், எப்பொழுது இந்த மனிதனின் கை என்மேல் பட்டதோ, அப்பொழுதிலிருந்து நன்றியைக் கொல்லத் தொடங்கிவிட்டேன், என் இனத்தையே அழிக்கவும் முற்பட்டேன்' என்று சொன்னதைக் கேட்ட மரம் வெட்டி நாணித் தலைக் குனிந்தான் என விந்தன் எழுதுவார்.

மரங்கள் மனித வாழ்க்கைக்கு உரங்கள். வேண்டியதை நல்கும் வரங்கள். செம்மரங்கள் கண்ணீர் சிந்துவது தமக்காக அல்ல, நமக்காக!

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
இலக்கணத்தால் மட்டுமே மனிதன் உயர்திணை
ஆகின்றான். மரம் அஃறிணை ஆகின்றது. மற்றபடி பயன்பாட்டால், உணர்வுகளால், மரமும் உயர்திணையே!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...